வைகோ சிறையில் இருந்தால் தேவையில்லாத செலவாம்.. கோர்ட்டில் சொன்ன தமிழக அரசு!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறையில் இருப்பதால் அரசுக்கு தேவையில்லாத செலவு என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : தேச துரோக வழக்கில் சிறையில் இருக்கும் வைகோவால் அரசுக்கு தேவையில்லாத செலவு என்பதால் அவரைஜாமீனில் வெளிவர அனுமதிப்பதில் எந்த எதிர்ப்பும் இல்லை என்று தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக கூறி வைகோ மீது தேசத்துரோக வழக்கு தொடர்ப்பட்டது. இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 3 ஆம் தேதி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வந்தபோது வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையேல் தன்னை கைது செய்ய வேண்டும் என்று தானாக முன் வந்து வைகோ மனு செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வைகோவுக்கு ஜாமீன் வழங்க முன் வந்தார். ஆனால் ஜாமீன் பெற மறுத்த வைகோ சிறைக்குச் சென்றார். தொடர்ச்சியாக வந்த இரண்டு விசாரணைகளிலும் ஜாமீன் பெற மறுத்து வைகோ கடந்த 50 நாட்களுக்கும் மேலாக புழல் சிறையில் உள்ளார்.
திருமா சந்திப்பு
இதனிடையே மக்கள் நலக் கூட்டியக்கத்தை சேர்ந்த திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோர் புழல் சிறையில் கடந்த மாதம் வைகோவை சந்தித்தனர். அப்போது சிறையில் இருந்து விரைவில் வெளிவரவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
ஜாமீன் வேண்டாம்
வழக்கு முடியாமல் சிறையை விட்டு வர மாட்டேன் என்றும், ஈழத்தமிழர் பிரச்சனையில் திமுகவின் துரோக்கத்தை இன்றைய இளம் தலைமுறைக்கு உணர்த்தவே ஜாமின் கேட்காமல் சிறைக்கு செல்கிறேன் என்று வைகோ கூறியிருந்தார். இந்த நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி வைகோ தரப்பில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த மாதம் நடைபெற உள்ள பிணாங்கு துணை முதல்வர் ராமசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்கு மலேசியா செல்ல வேண்டி இருப்பதால் வைகோ ஜாமீன் கோரி இருக்கலாம் என்று மதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
மனு விசாரணை
இந்நிலையில் இன்று வைகோவின் ஜாமின் மனு சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நீதிபதி புருசோத்தமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் அரசு வக்கீல் எம்.எல்.ஜெகன் ஏற்கனவே நீதிபதி ஜாமின் கொடுத்த போதும் அதை வைகோ ஏற்கவில்லை என சுட்டிக்காட்டினார்.
அரசு மறுப்பில்லை
எனவே தற்போது வைகோவை ஜாமீனில் நிபந்தனையின்றி வெளியில் விடலாம் என்றும், வைகோ சிறையில் இருப்பதால் அரசுக்கு தேவையில்லாத செலவு தான் ஆகிறது என்றார். மேலும் வைகோவை அவரது சொந்த ஜாமீனிலேயே விடுவிக்கலாம் என்றும் அரசுத் தரப்பு வக்கீல் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.