சர்வதேச முதலீட்டாளர் மாநாடு செப்டம்பருக்கு ஒத்திவைப்பு
சென்னை: சென்னையில் மே மாதம் நடைபெறவிருந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாடு வரும் செப்டம்பர் 9, 10 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே மாதம் கடுமையான கோடை என்பதால் அதற்குப் பிறகு நடத்தலாம் என்று பல வெளிநாட்டு முதலீட்டாளர்களும் கருத்துத் தெரிவித்ததால், முதலீட்டாளர் மாநாட்டுக்கான தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:
சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டினை, மே மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இந்த மாநாட்டினை சிறப்பாக நடத்துவதற்கு ரூ. 100 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
மேலும், இந்த மாநாட்டில் வெளிநாட்டினரை ஈர்க்கும் வகையில் பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
வெளிநாடுகளில் மட்டுமல்லாது, உள்நாட்டின் முக்கிய நகரங்களிலும் இதுபோன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, அகமதாபாத், கோவை ஆகிய நகரங்களில் ஏற்கெனவே நடத்தப்பட்டுள்ளன. சீனா, தைவான், இந்தியாவில் புனே, மும்பை, கொல்கத்தா, சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய நகரங்களிலும் முன்னோட்டக் கருத்தரங்குகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரூ. 76 ஆயிரம் கோடி
பல்வேறு துறைகளில் ரூ. 53 ஆயிரம் கோடிக்கும், எரிசக்தித் துறையில் ரூ. 23 ஆயிரம் கோடிக்கும் என மொத்தம் ரூ. 76 ஆயிரம் கோடி அளவிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் செய்யப்படவுள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
தமிழகத்தில் தொழில் முதலீட்டுக்கு ஏற்ற சூழ்நிலைகள் இருப்பதால் நமது மாநிலத்தில் முதலீடுகளைச் செய்வதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர். இது, அந்த நாடுகளில் கருத்தரங்குகளை நடத்தும்போது தெரிய வந்தது.
தமிழகத்தில் முதலீடு
இந்தச் சூழ்நிலையில், அதிக அளவிலான முதலீடுகளைச் செய்வதற்கும், முதலீட்டுக்கான திட்டங்களை இறுதி செய்வதற்கும் மேலும் சில காலம் தேவைப்படுவதாக வெளிநாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கோடை வெப்பம்
இதேபோன்று, முதலீட்டாளர் மாநாடு நடத்தத் திட்டமிட்டிருந்த மே மாதம் கடுமையான கோடை என்பதால் அதற்குப் பிறகு நடத்தலாம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மாநாடு ஒத்திவைப்பு
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் யோசனைகள் உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளர் மாநாடு மே மாதத்துக்குப் பதிலாக வரும் செப்டம்பர் மாதம் 9, 10 தேதிகளில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஜெ.வுக்காக மாற்றமா?
ஜெயலலிதா தாக்கல் செய்துள்ள அப்பீல் வழக்கின் தீர்ப்பு மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளதா? என்று எதிர்கட்சியினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.