3 மாணவிகள் மர்ம மரணம் - எஸ்.வி.எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து
சென்னை: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள எஸ்.வி.எஸ்., மருத்துவக் கல்லுாரிக்கு, 2013, செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட, மருத்துவக் கல்வி பயிற்சி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை, தமிழக அரசு ரத்து செய்து, அரசாணை வெளியிட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, எஸ்.வி.எஸ்., யோகா, இயற்கை மருத்துவக் கல்லுாரியில், கடந்த ஜனவரி மாதம் மூன்று மாணவியர் மர்மமான முறையில் சடலமா கிணற்றில் கண்டெடுக்கப்பட்டனர் இதையடுத்து, கல்லுாரி இழுத்து மூடப்பட்டது.
கல்லுாரியில் பயின்று வந்த மாணவர்கள், அரசு உத்தரவில், சிறப்பு கலந்தாய்வு நடத்தி, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள யோகா, இயற்கை மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், எஸ்.வி.எஸ்., மருத்துவக் கல்லுாரிக்கு, 2013, செப்., மாதம் வழங்கப்பட்ட, மருத்துவக் கல்வி பயிற்சி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை, தமிழக அரசு ரத்து செய்து, அரசாணை வெளியிட்டு உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வருகிறது எஸ்.வி.எஸ் சித்த மருத்துவக் கல்லூரி. 'இங்கு அடிப்படைக் கட்டமைப்பு வசதியில்லை; கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கின்றனர்; எதிர்த்துக் கேட்கும் மாணவர்களுக்கு அடி உதை விழுகிறது' என ஏராளமான குற்றச்சாட்டுகளைக் கூறி, தொடர் போராட்டங்களை மாணவர்கள் நடத்தினர்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதி எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள் மோனிஷா, பிரியங்கா, சரண்யா ஆகியோர் கல்லூரி எதிரில் இருந்த கிணற்றில் சடலமாக மிதந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய மூன்று மாணவிகளின் மர்ம மரணத்தில், பொதுமக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டது தமிழக அரசு. இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
எஸ்.வி.எஸ் கல்லூரியில் படித்து வந்த மாணவர்களில் பெரும்பாலானோர், அரசு சித்த மருத்துவக் கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 'ஹோமியோபதி உள்ளிட்ட சில பாடப் பிரிவுகளில் பயின்று வந்த ஐம்பது மாணவர்களுக்கு அரசு இடம் கொடுக்கவில்லை' என்று கூறி, அவர்கள் சில நாட்களுக்கு வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த மாணவர்களுக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை.
மூன்று மாணவிகள் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள கல்லூரி தாளாளர் வாசுகி, பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிடுவோம் என சிபிசிஐடி போலீசார் கூறி வருகின்றனர். மாணவிகள் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகம் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் எஸ்.வி.எஸ்., மருத்துவக் கல்லுாரிக்கு, 2013 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழங்கப்பட்ட, மருத்துவக் கல்வி பயிற்சி நிறுவனம் என்ற அங்கீகாரத்தை, தமிழக அரசு ரத்து செய்து, அரசாணை வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.