போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை-43,508 பேருக்கு நோட்டீஸ்:ஹைகோர்ட்டில் தமிழக அரசு
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு சென்னை ஹைகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. ஆசிரியர்களின் போராட்டம் குறித்து தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த நீதிமன்றம் தடை விதித்தும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களின் போராட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தாமாக முன்வந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
நீதிபதி கேள்வி
ஆசிரியர்களின் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வரும் 18-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் மயிலே மயிலே என்றால் இறகு கிடைக்காது என்றும் அவர் அறிவுறுத்தியிருந்தார். இதுபோன்று 12 கேள்விகளை நீதிபதி கிருபாகரன் நேற்று எழுப்பியிருந்தார்.
பதில் மனு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் கேள்விகளுக்கு தொடக்க கல்வி இயக்குநர் பதில் மனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது அந்த மனுவில் அவர் கூறியிருக்கையில், போராடிய காலத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை.
அங்கீகரிக்கப்படாத விடுப்பு
வேலை நிறுத்த நாள்கள் அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கணக்கிடப்படும். பணிக்கு வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு முறை நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு முறை நடவடிக்கை தொடர்பாக 43, 508 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்களை காட்டிலும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்குத்தான் அதிக ஊதியம் வழங்கப்படுகிறது என்று தனது பதில் மனுவில் கூறியிருந்தார்.
நீதிபதி பதில்
இதைத் தொடர்ந்து நீதிபதி கிருபாகரன் கூறுகையில், அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு நீதிமன்றம் எதிரானது அல்ல. சட்டத்துக்கு உள்பட்டு அவர்கள் போராட்டம் நடத்த வேண்டும். ஆசிரியர்களின் போராட்டத்தைதான் நான் கருத்தில் கொள்கிறேன், அரசு ஊழியர்கள் குறித்து நான் கேட்கவில்லை. அரசியல் ரீதியாக செயல்பட்ட ஆசிரியர் சங்கங்கள் தற்போது சமூக, மத, மொழிவாரியாக மாறிவிட்டன என்றார் நீதிபதி.