ஸ்டெர்லைட்டுக்கு மின் இணைப்பு கொடுக்காவிட்டால் பெரும் அழிவு ஏற்படும்.. ஹைகோர்ட்டில் வேதாந்தா குமுறல்
Recommended Video
மதுரை: அவசரப்பட்டு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவிடாமல் அரசு எடுத்த நடவடிக்கைதான், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், அமிலம் வெளியேறியதற்கான காரணம் என்று வேதாந்தா குழுமம் மதுரை ஹைகோர்ட் கிளையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் கடும் போராட்டங்கள், போலீசாரின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பெரும் பிரச்சினைக்கு பிறகு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மே 28ம் தேதி சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆலைக்குள் யாரும் போக முடியவில்லை. மின் இணைப்பையும் அரசு துண்டித்துவிட்டது. இந்த நிலையில் கடந்த சில தினங்கள் முன்பாக ஆலையில் இருந்து சல்ஃபியூரிக் ஆசிட் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் உதவியோடு அந்த அமிலங்கள் அகற்றப்படுகின்றன.
ஹைகோரோ்ட்டில் மனு
இந்த நிலையில், மதுரை ஹைகோர்ட் கிளையில் ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகிக்கும் வேதாந்தா குழுமம், 18 பக்க ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், தமிழக அரசு அவசர கதியில் ஆலையை மூடி சீல் வைத்துவிட்டது. இதனால் உள்ளே இருந்த அமிலங்களை பாதுகாப்பாக இடமாற்றம் செய்ய முடியவில்லை. இதுபற்றி அரசு நிர்வாகத்திடம் வலியுறுத்தியபோதும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
இன்னும் இருக்கு
ஆலைக்குள் மேலும் 7-8 டாங்குகளில், சல்ஃபியூரிக் ஆசிட் உள்ளது. அவற்றை கவனிக்காமல் விட்டால் மீண்டும் அமில கசிவு ஏற்படும். இதனால் ஆலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் பாதிக்கப்படும். அது பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆண்டுக்கு 1 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சல்ஃபியூரிக் ஆசிட்டை ஸ்டெர்லைட் உற்பத்தி செய்து வருகிறது. இதற்கான பைப்லைனில் லீக் ஆகிறதா என்பதை அவ்வப்போது சோதித்துக்கொண்டே இருப்போம்.
பெரும் பாதிப்பு
ஒருவேளை ஆசிட் லீக் ஆகி தண்ணீரில் கலந்தால் அது சுற்றுவட்டார பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மழைக்காலங்களில் இதற்கான வாய்ப்பு அதிகம். இதனால் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுவதோடு, உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. மண்ணுக்குள்ளும், தண்ணீருக்குள்ளும் ஆசிட் கலந்தால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும். எனவே, ஆலையை பரிசோதிக்க எங்களுக்கு அனுமதி தர வேண்டும். போதிய பராமரிப்புகளை செய்யும் முன்பாக அரசும், மாவட்ட நிர்வாகமும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பை துண்டித்துவிட்டன.
முன்னெச்சரிக்கை எடுக்கவில்லை
பொதுமக்களின் கோபத்தை மட்டுமே கணக்கில் எடுத்து அரசு, ஆலையை துரிதமாக மூடிவிட்டது. அதனால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும், பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்தும் அரசு யோசிக்கவில்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பை அளித்தால், ஆசிட் கசிவை தடுத்து நிறுத்தும் வழிமுறைகளை ஆலை மேற்கொள்ள முடியும். இவ்வாறு வேதாந்தா குழுமம் தனது மனுவில் தெரிவித்துள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் ஏ.எம்.பஷீர் அகமது தலைமையிலான அமர்வு, உண்மையிலேயே, ஆசிட்டை அகற்ற மின் இணைப்பு தேவையா என்பது குறித்து தமிழக அரசு பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.