பொதுப்பணித்துறை காண்டிராக்டர்களுக்கு ஆதரவாக செயல்படும் என்ஜீனியருக்கு தமிழக அரசு நோட்டீஸ்
சென்னை: பொதுப்பணி துறையில் 45 சதவீத கமிஷன் கேட்கும் விவகாரத்தை வெளிக்கொண்டு வந்த ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த அதிகாரியிடம் விளக்கம் கேட்டு தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக சென்னை தரமணியில் உள்ள பொதுப்பணி துறை நீராய்வு நிறுவன செயற்பொறியாளர் தேவராஜன் கருத்து தெரிவித்தார். இதுகுறித்து 9 ஆம் தேதி பேட்டியும் அளித்தார்.
நேர்மையான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஒருங்கிணைத்து புதிய சங்கம் துவங்க முயற்சித்து வருகிறார். இந்த நிலையில் செயற்பொறியாளர் தேவராஜிடம் விளக்கம் கேட்டு அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நீராய்வு நிறுவன தலைமை பொறியாளர் மற்றும் இயக்குனர் மூலம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனுப்பியுள்ள கடித்தில், "உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமல் பொதுப்பணி துறைக்கு எதிராக பத்திரிகை மற்றும் டிவிகளில் கருத்து தெரிவித்து உள்ளீர்கள். இந்த நடவடிக்கை அரசு கொள்கைகளுக்கு எதிரானது. அரசு விதியை மீறிய செயல். இந்த ஒழுங்கீனமற்ற நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. எனவே இதுகுறித்து எழுத்துப்பூர்வமான விளக்கத்தை அடுத்த 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் நகல் பொதுப்பணி துறையின் முதன்மை தலைமை பொறியாளர் திருமாறன், துறை செயலர் பழனியப்பனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் தேவராஜன், "லஞ்சம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கக் கூடாது என்பதற்காக அரசு விதிகளை காரணம் காட்டி என் வாய்க்கு பூட்டு போட்டுவிட முயற்சிக்கின்றனர். நான் யாருக்கும் எதற்கும் அடங்க மாட்டேன்.
மறைமுக மிரட்டலுக்கும் நேரடி மிரட்டலுக்கும் பயந்து மற்றவர்களை போல தற்கொலை செய்யவும் மாட்டேன். உரிய விளக்கத்தை அரசுக்கு அளிப்பேன். அரசு துறையில் நடக்கும் முறைகேடுகளை பத்திரிகை மூலமாகத் தான் வெளிக் கொண்டுவர வேண்டும். இதற்கு தீர்வு காண அரசு ஊழியர் விதிகளில் மாற்றம் செய்ய சட்ட ரீதியாக முயற்சி எடுப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.