கல்வி நிறுவன ஊழல்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா?
கல்வி நிறுவன ஊழல்களும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் நடந்த சிலை கடத்தல் ஊழல் வழக்குகளை எல்லாம் சிபிஐ வசம் ஒப்படைத்தது போல் கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற ஊழல் வழக்குகளும் சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கல்வி நிறுவனங்களில் ஏராளமான முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதுபோன்ற வழக்குகளில் சஸ்பெண்ட், கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன் விசாரணை நின்று விடுவதே ஊழல் பெருகுவதற்கு காரணம் ஆகும்.
வேதனை
அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்துவிட்டால் போதும் என்ற அளவுக்கு மக்கள் மத்தியில் அதன் மீது மோகம் அதிகரித்து வருகிறது. ஆனால் அந்த பல்கலைக்கழகத்திலேயே ஊழல் என்பதை கேள்விப்படும் போது கல்வியாளர்களும் பெற்றோர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
எந்த ரூபத்தில் ஊழல்
பேராசிரியர் நியமனம், மறுகூட்டல், விடைத்தாள் திருத்தம் என அனைத்திலும் பல கோடி ஊழல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுபோன்ற செயல்களால் நேர்மையாக படித்து முடித்தவர்கள் வேலையின்றி உரிய அங்கீகாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
சிபிஐ விசாரணை
தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட தீனதயாளன் வழக்கு முதல் கவிதா வழக்கு வரை இனி சிபிஐயே விசாரணையை நடத்தும்.
ஆளுநர் உத்தரவு
அதுபோல் தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள அனைத்து கல்வி துறை சம்பந்தமான ஊழல் வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைப்பது என்ற முடிவை பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநரோ அல்லது தமிழக அரசோ எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.