ஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ்
ஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஆற்றுமணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு காற்றில் பறக்கவிட்டுள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆற்றுமணல் கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தினாலும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ஆற்று மணல் கொள்ளையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு, ஆற்று மணல் கொள்ளையை அம்பலப்படுத்த உதவும் புள்ளி விவரங்களை மறைத்திருக்கிறது. மாநில அரசின் இந்த கள்ளத்தனம் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
ஆற்று மணல் கொள்ளை
தமிழகத்தின் முக்கிய ஆறுகளில் குவாரிகள் அமைத்து மணல் விற்பனை செய்வதன் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு என்பது குறித்த விவரங்கள் நீர்ப்பாசனத் துறையின் திட்டச் சாதனைகள் குறித்த ஆவணத்தில் இடம் பெறுவது வழக்கம். ஆனால், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த ஆவணத்தில் தமிழகத்தில் இப்போது எத்தனை மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன? அவற்றின் மூலம் அரசுக்கு கிடைத்த வருமானம் எவ்வளவு? என்பது குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இது அறியாமல் நடந்த தவறு அல்ல. மாறாக ஆட்சியாளர்கள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகும்.
ஆளுநரிடம் முறையீடு
தமிழகம் முழுவதும் மணல் குவாரிகளை இயக்கி வரும் பொதுப்பணித்துறைக்கு 2016-17ஆம் ஆண்டில் கிடைத்த வருமானம் ரூ.86.33 கோடி தான் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு தெரிவித்தது. ஆண்டுக்கு ரூ.55,000 கோடிக்கு மணல் விற்பனை நடைபெறும் நிலையில் அரசுக்கு ரூ.86 கோடி மட்டும் வருமானம் கிடைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்? அப்படியானால் மணல் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் மீதமுள்ள தொகை யாருக்கு செல்கிறது? என்பது குறித்து பா.ம.க. ஆதாரங்களுடன் வினா எழுப்பியது. ஆளுனரிடமும் இது குறித்து புகார் அளித்தது. அதேபோன்ற நெருக்கடி இந்த ஆண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே இந்த புள்ளிவிவரங்களை அரசு மறைத்திருக்கிறது.
மணல் இறக்குமதி
நடப்பாண்டிற்கான நீர்ப் பாசனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தமிழக அரசு தெரிவித்துள்ள இன்னொரு புள்ளிவிவரப்படி, முதற்கட்டமாக மாதம் 5 லட்சம் டன் வீதம் 30 லட்சம் டன் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. இத்துடன் ஒப்பிடும்போது, அரசு குவாரிகளில் இருந்து எடுக்கப்படுவதாக அரசால் கணக்கு காட்டப்படும் மணல் அளவு ஒரு பொருட்டே அல்ல. இறக்குமதி மணலில் அளவை சற்று அதிகரித்தாலே தமிழகத்தின் மணல் தேவையை சமாளித்து விட முடியும்.
மணல் குவாரிகள் மூடல்
இதன்மூலம் தமிழகத்திலுள்ள ஆற்று மணல் குவாரிகள் அனைத்தையும் மூடி இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க முடியும்.எனவே, மணல் இறக்குமதியையும், செயற்கை மணல் உற்பத்தியையும் அதிகரிப் பதன் மூலம் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும். அதுமட்டுமின்றி, மணல் கொள்ளை மற்றும் விற்பனையில் நடந்த ஊழல் குறித்து மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.