தமிழக அரசின் மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டுவர உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழக அரசின் மதுபான கொள்கையில் மாற்றம் கொண்டு வர உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை: மதுக்கொள்கையில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என்றும் தற்போதைய கொள்கையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் மதுபானக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதில் அறவழி போராட்டங்களும் உண்டு, கடையை அடித்து நொறுக்கும் அராஜக போராட்டமும் உண்டு. பெண்களே டாஸ்மாக் கடையை அடித்து துவம்சம் செய்து விடுகின்றனர்.
இதனால் பொழுதுவிடிந்து பொழுது போனால் நாட்டில் மதுக்கடைக்கான போராட்டம்தான் அதிகமாக உள்ளது. சென்னை அருகே புதூரில் மதுக்கடையை மூடக் கோரி இந்துஸ்தான் கல்லூரி வழக்கு தொடுத்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு கூறுகையில், தமிழக அரசு மதுக் கொள்கையை மாற்ற வேண்டும். மதுகடைக்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் தினமும் நடைபெறுகிறது.
மதுக்கடைகள் தொடர்பாக மக்கள் எதிர்ப்பை கருத்தில் கொள்ள வேண்டும். மதுக்கடையால் வருமானம் வந்தாலும் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை. மக்கள் நலனுக்காக மதுக்கடை திறப்பதாக எந்த அரசும் சொல்ல முடியாது. மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என்று ஸ்டிக்கர் ஒட்டினால் போதாது.
எனவே மதுகொள்கையை தமிழக அரசு மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றார்.