நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் : ராமதாஸ்
நீட் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டத்தை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை : நீட் தேர்வை ரத்து செய்ய தமிழகம் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக வழக்குத் தொடர வேண்டும் என்றும், சட்டப் போராட்டங்களை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், நீட் எனப்படும் மிகப் பெரிய சமூக அநீதியை விரட்ட சட்டப் போராட்டம் என்ற வலிமையான ஆயுதம் கைகளில் இருந்தும் அதை அரசு பயன்படுத்தாதது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
நீட் தேர்வு கட்டாயம்
மேலும் அந்த அறிக்கையில், நீட் தேர்வு சட்டப்படி செல்லும் என்று உச்சநீதி மன்றம் இப்போது வரை எந்தத் தீர்ப்பும் வழங்கவில்லை. மாறாக நீட் தேர்வு செல்லாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை கட்டாயமாக்கி 2012-ம் ஆண்டு மத்திய அரசு ஆணையிட்டது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், அனில்தவே ஆகியோர் அடங்கிய அமர்வு 18.7.2013 அன்று அளித்தத் தீர்ப்பில் நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பல்வேறு உரிமைகளை பறிப்பதால் அது செல்லாது என்று தீர்ப்பளித்தது.
நீட் தேர்வு செல்லாது
நீதிபதி அனில் தவே மட்டும் இதற்கு எதிராக தீர்ப்பளித்திருந்தார். இதனால் 2013 முதல் 2015 வரை இந்தியாவில் எங்கும் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என்பதே உண்மை. உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் சார்பில் தாக்கல் செய்யப் பட்ட சீராய்வு மனுவை விசாரித்த அனில்தவே தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, நீட் தேர்வு செல்லாது என 2013-ம் ஆண்டில் அளிக்கப்பட்டத் தீர்ப்பை திரும்பப்பெறுவதாக 11.4.2016 அன்று ஆணையிட்டது.
சுகாதாரத்துறை நிலைக்குழு
எந்தக் காரணமும் கூறாமல், நீட் தேர்வு செல்லாது என்ற தீர்ப்பை திரும்பப்பெறும் ஆணையை மட்டும் வைத்துக் கொண்டு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீட் தேர்வை நடத்துவது நியாயமில்லை. கடந்த 8.3.2016 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட சுகாதாரத் துறைக்கான நிலைக்குழுவின் அறிக்கையின் 5.26-வது பத்தியில் இத்தேர்வை ஏற்காத மாநிலங்களுக்கு விலக்களித்திடவும் அவ்வாறு விலக்களிக்கப்பட்ட மாநிலங்கள் பிறகு இத்தேர்வை ஏற்க முன்வந்தால் அதற்கும் வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
நாடாளுமன்ற பரிந்துரை
நீட் தேர்வு தொடர்பான முதன்மை வழக்கு விசாரிக்கப்பட்டிருந்தால் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரையைக் காரணம் காட்டியும், தமிழகத்தில் 2007-ம் ஆண்டு முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வை ரத்து செய்யும் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருப்பதைக் காரணம் காட்டியும் விலக்களிக்கப்பட்டிருக்கலாம். அந்த வாய்ப்புகளுக்கெல்லாம் இடம் கொடுக்காமல், முதன்மை வழக்கின் விசாரணையை முடக்கி வைத்திருப்பதன் மூலம் நீட் விவகாரத்தில் தமிழகத்திற்கு பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசன அமர்வு
அதுமட்டுமின்றி, நீட் தேர்வின் செல்லும் தன்மை குறித்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வால் தான் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், நீட் தேர்வு தொடர்பான வேறு பல வழக்குகளை அனில்தவே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு விசாரித்து தீர்ப்பளித்திருக்கிறது. இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இந்த வழக்கை விசாரிக்கும் அரசியல் சட்ட அமர்வுக்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்து முதன்மை வழக்கை விசாரித்து விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும், அவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் வரை நீட் தேர்வு நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்.
நீட் எதிர்ப்பு மசோதா
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கப்பதற்கான சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி 15 மாதங்களாகியும் அதை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இத்தகைய சூழலில் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் தீர்வுக்கு வழிவகுக்கும். அதைவிடுத்து வெற்று முழக்கங்களை எழுப்புவதால் எந்த பயனும் இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
நீட் கொடுமைக்கு தீர்வு
எனவே, நீட் தேர்வு தொடர்பான முதன்மை வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோடை விடுமுறைக்காக மூடப்படுவதற்கு முன்பாக தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அது தான் நீட் கொடுமையிலிருந்து விடுதலை பெற்றுத் தரும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.