பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பில் தமிழக அரசும் கேரளாவை பின்பற்ற வேண்டும்: ராமதாஸ்
பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பில் தமிழக அரசும் கேரளாவை பின்பற்ற வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: கேரள முதல்வர் பினராயி விஜயன், பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியைக் குறைத்து இருப்பது போல தமிழகத்தில் விலைக்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் மீதான விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. இது நாட்டு மக்களின் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதித்துள்ளது.
இந்நிலையில், பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
எரிபொருள் விலைக்குறைப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலைகளை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து கேரள அரசு ஆணையிட்டுள்ளது. கேரளத்தில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள் நாளை நடைமுறைக்கு வருகின்றன. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு ஆகும்.
கஞ்சத்தனம் காட்டும் அரசு
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. சென்னையில் இன்றைய நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.35 ஆகவும், டீசல் விலை ரூ.73.12 ஆகவும் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி, தினமும் சராசரியாக லிட்டருக்கு 30 காசுகள் வரை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள், விலையை குறைக்கும் போது மட்டும் லிட்டருக்கு ஒரு காசு, 5 காசுகள், 7 காசுகள் என கஞ்சத்தனம் காட்டுகின்றன.
தமிழக அரசும் செய்யவேண்டும்
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு கலால் வரியை உயர்த்திய மத்திய அரசு, அதை இப்போது குறைக்க வேண்டுமென விடுக்கப்படும் வேண்டுகோள்களை புறக்கணிக்கிறது. இத்தகைய சூழலில் மத்திய அரசுக்கும், பிற மாநில அரசுகளுக்கும் வழிகாட்டும் வகையில் கேரள அரசு விற்பனை வரியை குறைத்திருக்கிறது. இந்த அறிவிப்பிலிருந்து மற்ற மாநில அரசுகள், குறிப்பாக தமிழக அரசு பாடம் கற்க வேண்டும். தமிழகத்தில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட விற்பனை வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.31 குறையும்.
உடனடியாக நடவடிக்கை
அதேபோல், டீசல் விலை ரூ.2.10 குறையும். இந்த விலைக் குறைப்பால் தமிழக அரசுக்கு பெட்ரோல், டீசல் விலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது. மத்திய, மாநில அரசுகள் வரிக் குறைப்பு செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.70, ரூ.60க்கும் கீழ் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.