ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ‘இருக்கை’... அரசு ஆதரிக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை: உலகப்புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்துதல், அலகாபாத்தில் திருவள்ளுவர் சிலை அமைத்தல் உள்ளிட்ட தமிழ் மொழியின் மேன்மையைப் பரப்பிடும் சிறப்பான செயல்களில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உலகப் புகழ் பெற்ற, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், மூன்று கோடி மக்கள் பேசும் உக்ரேனிய மொழிக்கு, இரண்டு இருக்கைகள் உள்ளன; 15 லட்சம் மக்கள் பேசக்கூடிய, 'செல்டிக்' மொழிக்கும் இருக்கைகள் உள்ளன. அதேபோல, 'ஹீப்ரு, சமஸ்கிருதம்' உட்பட, பல மொழிகளுக்கும், இருக்கைகள் இருக்கின்றன.
ஆனால், எட்டு கோடி மக்கள் பேசும் செம்மொழியான தமிழ் மொழிக்கு, அங்கே இருக்கை இல்லை. தற்போது, தமிழ் மொழிக்கு இருக்கை ஏற்படுத்துவதற்கான முயற்சியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் இறங்கி, அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுள்ளனர்.அதேபோல, உ.பி., மாநிலம் அலகாபாத்தில், திருவள்ளுவர் சிலை அமைக்க, சிலர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கை அமைய எடுக்கப்பட்ட முயற்சி; உ.பி.,யில், திருவள்ளுவர் சிலை அமைக்க மேற்கொண்ட முயற்சி, இரண்டையும் பாராட்டுவதோடு, இதை தமிழக அரசு ஊக்குவித்து, உரிய முறையில் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஐந்தாண்டு ஆட்சி முடிய இருக்கும் நேரத்தில், முதலீட்டாளர் மாநாட்டை நடத்துவதற்காக, 100 கோடி ரூபாய் செலவிட முன்வரும் தமிழக அரசு, தமிழின் மேன்மையை பரப்பிடும், இத்தகைய சிறப்பான செயல்களிலும், ஈடுபட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.