ஓசூர் - சேலம் - நெய்வேலி மக்கள் வானத்த அண்ணாந்து பாக்க போறாங்க... ஏன் தெரியுமா?
தமிழகத்தில் விரைவில் சிறிய நகரங்களிடையே விமான சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை : மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் விரைவில் ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விமைன சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
விமானப் பயணத்தைச் சந்தை அடிப்படையிலான வழிமுறை மூலம் உள்நாட்டு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் விதமாக உதான் திட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
உதான் திட்டத்தின் மூலம் முதலில் சிம்லா-தில்லி, கடப்பா-ஹைதராபாத் மற்றும் நந்தேட்-ஹைதராபாத் வழித்தடங்களில் விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த சேவையில் 1 மணி நேர விமானப் பயணம் அல்லது 500 கிமீ தூரம் கொண்ட விமானப் பயணங்களுக்கு அதிகபட்சம் 2,500 ரூபாயாக விமானக் கட்டணம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் உதான் திட்டத்தின் கீழ் தமிழகத்திலும் சிறிய நகரங்களுக்கு இடையேயான விமான சேவை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் மத்திய அரசுடன் இந்த ஒப்பந்தத்தில் முதல்வர் பழனிசாமி கையெழுத்திட்டதாக தெரிகிறது.
இதன்படி ஓசூர் - சேலம் - நெய்வேலி இடையே விரைவில் இந்த விமான சேவை தொடங்கப்பட உள்ளது. சிறிய நகரங்களிடையே விமான சேவையை தொடங்குவதன் மூலம் சாதாரண மக்களும் விமானத்தில் பயணிக்கலாம் என்பதோடு வர்த்தகத்தை பெருக்கவும் இது உதவும் என்று அரசு கருதுகிறது.