அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன் ஜெ. எப்படி இருந்தார்.. புதிய வீடியோ ஆதாரம் தாக்கல்
அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஜெயலலிதா எப்படி இருந்தார்.
சென்னை: பெங்களூர் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஜெயலலிதா கர்ப்பமாக இல்லை என்று வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு, நீதிபதியிடம் சமர்ப்பித்தது.
ஜெயலலிதா இறந்தவுடன் அவரது வாரிசு என கூறி சிலர் கிளம்பியுள்ளனர். அவர்களுள் பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் அவர் தான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்றும் அதற்காக டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுத்து வைஷ்ணவ முறைபடி சடங்கு செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
கட்டுக்கதை
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் அம்ருதா தரப்பு வழக்கறிஞர் பிரகாஷ் தனது வாதங்களை முன்வைத்தார். இதையடுத்து அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில் சொந்த ஆதாயத்துக்காக அம்ருதா கட்டுக்கதை கூறுகிறார்.
சொத்துக்காகத்தான்
அம்ருதா வழக்கில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. சொத்தை கொள்ளையடிக்கவே இதுபோன்ற திட்டத்தை அவர்கள் தீட்டியுள்ளனர். 2014-ஆம் ஆண்டே வார இதழ் ஒன்றுக்கு ஜெயலலிதாவின் சகோதரி சைலஜா என பேட்டி கொடுத்தார்.
ஆதாரம்
இந்த பேட்டியை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. அம்ருதா பிறந்ததாக கூறப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் ஜெயலலிதா திரைப்பட விழாவில் பங்கேற்றார். இதற்கான வீடியோ ஆதாரத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
என்ன தீர்ப்பு
அந்த வீடியோவில் அமிர்தா பிறந்ததாக கூறப்படும் போது ஜெ. கர்ப்பமில்லை என்பதற்கான ஆதாரத்தை நீதிபதி பார்த்தார். இந்த வழக்கு விறுவிறுப்பாக செல்கிறது. இதில் இறுதியில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.