தொடர் சர்ச்சை: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் டெல்லி பயணம் ரத்து
தமிழக ஆளுநர் பன்வாரிலால் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்துள்ளார்.
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்வதாக இருந்த நிலையில், அந்தப் பயணம் திடீரென்று ரத்து செய்துள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றதில் இருந்து அவர் தொடர் சர்ச்சைகளில் ஆளாகி வருகிறார். மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் தன்னிச்சையாக ஆலோசனை நடத்தியதால் அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தின.
இந்நிலையில், துணைவேந்தர் நியமனத்தில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் தராமல் வேற்று மாநில பேராசிரியர்களை தமிழக அரசின் ஆலோசனையின்றி நியமித்ததில் தொடர் கண்டனங்கள் எழுந்தன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் பேசி, அவர்களை பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடும் ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதில் அவர் ஆளுநர் பெயரை பயன்படுத்தி இருந்ததால், தமிழக அரசியல் கட்சிகள் ஆளுநருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கின. இதுதொடர்பாக சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஆளுநர் தான் அந்த பெண்மணியை நேரில் கூட பார்த்தது இல்லை என்றும், தனக்கு இதில் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகை நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டியதற்காக ஆளுநர் மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதனையடுத்து, அந்த செயலுக்கு நேற்று மன்னிப்பு கோரினார்.
இந்நிலையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று டெல்லி செல்ல இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், இன்று வெளியான செய்திக்குறிப்பில் ஆளுநர் தன்னுடைய பயணத்தை ரத்து செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.