மாமல்லபுரத்தில் விபத்தை ஏற்படுத்தியது நாங்கள் அல்ல... காவல்துறை வாகனத்தை கை காட்டும் ஆளுநர் மாளிகை
ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் விபத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : கடலூர் மாவட்டத்தில் ஆய்வை முடித்துவிட்டு வரும் வழியில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் மூன்று பலியாகி உள்ள செய்தியை ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் மறுத்து உள்ளன.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று கடலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆளுநரின் இந்த ஆய்வுக்கு தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கருப்பு கொடி காட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
இந்நிலையில், கடும் எதிர்ப்புகளுக்கிடையே ஆளுநர் ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்பும் வழியில் மாமல்லபுரம் அருகே புதிய கல்பாக்கத்தில் அவரது பாதுகாப்பு வாகனம் மோதியதில் சாலை ஓரத்தில் நின்று இருந்த மூதாட்டி, தந்தை - மகன் உள்ளிட்ட மூவர் பலியாகினர். இதனால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்து குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில் ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் மோதிய செய்தி தவறு என்றும், அதுபோல எந்த ஒரு விபத்தும் நடக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த விபத்து குறித்து தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாகவும் உண்மையில் மாவட்ட காவல் துறை நிர்வாகத்தின் கார் மோதியே விபத்து ஏற்பட்டதாகவும் ஆளுநர் மாளிகை விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.