சூரப்பா நியமனம் நியாயமாக நடந்தது... அரசியல் செய்ய வேண்டாம்.. ஆளுநர் அறிக்கை!
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதில் விதிமீறல்கள் இல்லை என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளார். பரிந்துரைப்படியே சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக அரசியல் ரீதியில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள சுயநிதி பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டார். சுமார் 2 ஆண்டுகள் இந்த துணைவேந்தர் பதவி காலியாக இருக்கும் நிலையில் காவிரி பிரச்னை தீவிரமாக நடைபெற்று வரும் இந்த நிலையில் கன்னடரான சூரப்பாவை ஆளுநர் துணைவேந்தராக நியமித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் ஆர்எஸ்எஸ் பாஜகவைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூரப்பா நியமனம் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்டள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டதில் எந்த விதி மீறலும் இல்லை. தேர்வுக்குழு பரிந்துரைத்த 3 பேரில் ஒருவரான சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களின் நலன் கருதியே சூரப்பாவை துணைவேந்தராக நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டது. துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றது இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. துணை வேந்தர் நியமனம் விதிகளின் படியே நடந்துள்ளதால் அரசியலாக்க வேண்டாம் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.