விரைவில் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் அளிக்கும் திட்டம் : ஆளுநர் அறிவிப்பு
பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தபடும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக ஆளுநர் சட்டசபையில் குறிப்பிட்டு உள்ளார்.
இந்த ஆண்டிற்கான தமிழக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த கூட்டதொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது உரையின் மூலம் துவக்கி வைத்தார்.
ஆளுநரின் உரையில் தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பாராட்டியும், புதிதாக தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களை அறிமுகப்படுத்தியும் பேசினார்.
இருசக்கர வாகனம் வாங்க மானியம்
பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க மானியம் அளிக்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கு வழங்க அளிக்கப்பட இருந்த மானியத்தொகை 20,000 ஆயிரம் ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
ஜப்பானின் உதவியுடன் தொழிற்பூங்கா
கடந்த காலங்களில் நஷ்டத்தில் இயங்கி வந்த மின்வாரியத்தின் நிதிநிலை தற்போது சீரமைப்பட்டு உள்ளதாகவும், வரும் காலங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் திறன் வளர்ச்சிக்காக ஜப்பான் அரசு உதவியுடன் பல புதிய கல்வித்திட்டங்கள் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், அந்நாட்டு உதவியுடன் 4 தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றி
மேலும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டுகள் இதுவரை 1.88 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், விரவில் அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.கடந்த ஆட்சிக்காலத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும், அதன் மூலம் 96,341 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட கூடிய அளவில் 61 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்துதல்
தமிழகத்தில் கல்வியை மேம்படுத்த அரசு கலைக்கல்லூரிகளில் 268 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், உட்கட்டமைப்பு வசதிக்காக 210 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் கூறி தனது உரையை நிறைவு செய்தார் ஆளுநர். முடிவில் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று தமிழில் கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.