பெண் பத்திரிகையாளரிடம் 24 மணி நேரத்தில் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்: வேல்முருகன் எச்சரிக்கை
பெண் பத்திரிகையாளரிடம் 24 மணி நேரத்தில் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளரிடம் அநாகரிகமான முறையில் நடந்து கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை பனகல் மாளிகை அருகே தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆளுநருக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வேல்முருகன், ஆளுநர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், நிர்மலாதேவி விவகாரத்தில் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
மேலும், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவியேற்றதில் இருந்து சூப்பர் முதல்வராக செயல்பட்டு வருகிறார். மாவட்டங்களில் தன்னிச்சையாக ஆய்வும், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வதை எதிர்த்து ஏற்கனவே தமிழக எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன.
ஆனால், ஆளுநர் எதையும் கண்டுகொள்ளாமல் சர்வாதிகாரப் போக்கில் செயல்பட்டு, பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசின் ஆலோசனை இல்லாமல் நியமிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே உடனடியாக இது போன்ற நடவடிக்கைகளை ஆளுநர் கைவிட வேண்டும்.
விருதுநகர் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளுடன் பேசிய ஆடியோவில் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்திருப்பது மிகுந்த வேதனைக்குரியது. அதில், உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா என்பதை முறையாக விசாரிக்க நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் அநாகரீகமான முறையில் ஆளுநர் நடந்து கொண்டுள்ளார். அதனால், அந்த பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
எனவே, அந்த பெண் பத்திரிகையாளரிடம் ஆளுநர் 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.இல்லாவிட்டால் விரைவில் ஆயிரக்கணக்கான பெண்களை கூட்டி ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தப்படும் .
தொடர்ந்து தமிழக உரிமைகளை சிதைக்கும் வண்ணம் செயல்பட்டு வரும் ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் இல்லாவிட்டால், ஆளுநர் எங்கு சென்றாலும் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடக்கும் என்று வேல்முருகன் அறிவித்துள்ளதால், அப்பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் புதுவையில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் படத்தை செருப்பால் அடிக்கும் போராட்டம் நடைபெற்றது.