விகே சசிகலா எனும் நான்... இது நடக்காமல் போனது ஏன்? மனம் திறந்த ஆளுநர் வித்யாசாகர் ராவ்
சசிகலாவை தாம் முதல்வர் பதவியேற்க அழைக்காமல் காத்திருந்தது ஏன் என்பது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் விவரித்துள்ளார்.
சென்னை: சசிகலாவை தாம் முதல்வராக பதவியேற்க அழைக்காதது ஏன் என்பது குறித்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மனம் திறந்து விவரித்துள்ளார்.
http://www.dailyo.in இணையதளத்தில் இது தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் எழுதியுள்ளதாவது:
தமிழக நிகழ்வுகள்...
என்னுடைய 45 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளேன். ஆனால் அண்மையில் தமிழக அரசியல் நிகழ்வுகளில்தான் என்னுடைய நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டன.
என் நிலை சரியே...
விகே சசிகலாவை முதல்வராக பதவியேற்க அழைக்காமமல் இருந்த என்னுடைய நிலைப்பாடு சரி என்பதை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நிலைநாட்டி விட்டது. (1991-ம் ஆண்டு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவை குற்றவாளி என உறுதி செய்தது உச்சநீதிமன்றம்).
காத்திருப்பு
என்னுடைய முடிவுகளை பெரும்பாலும் அனைவரும் வரவேற்கவே செய்தனர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல. அத்துடன் உச்சநீதிமன்றமும் ஒருவாரத்தில் தீர்ப்பளிக்கப் போவதாகவும் அறிவித்துவிட்டது. ஆகையால் எந்த ஒரு நடவடிக்கையையும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பின்னர் மேற்கொள்ளலாம் என காத்திருப்பதே சரியானதாக இருக்கும் என முடிவு செய்தேன்.
சட்ட ஆலோசனை
தமிழக அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக நான் சட்ட ஆலோசனைகளைப் பெற்றேனா? என்கிற கேள்வியை சிலர் எழுப்புகின்றனர். அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சோலி சொராப்ஜி, கே பராசரன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கும் அறிக்கை அனுப்பி உள்ளேன். ஒரு ஆளுநராக அந்த அறிக்கையின் விவரங்களை வெளியிட முடியாது. ஊடகங்கள், ஊடக விவாதங்களில் பங்கேற்று எனக்கு ஆதரவாக மற்றும் எதிராக கருத்து தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அந்த இணையதளத்தில் எழுதியுள்ளார்.