தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கைக்கு கண்டனம்; கச்சத்தீவு மீட்பே தீர்வு- ஆளுநர் உரையில் ரோசய்யா
சென்னை: தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்யும் இலங்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன் கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா தமது உரையில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டசபையில் புதன்கிழமையன்று ஆளுநர் ரோசய்யா ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாக். நீரிணைப்புப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களின் படகுகளை சிறைபிடிக்கும் இலங்கைக் கடற்படையினரின் செயல்கள் கடும் கண்டனத்திற்குரிய வையாகும்.
இந்த மீனவர்கள் விடுதலையான பின்னரும் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விட மறுக்கும் இலங்கையின் போக்கு, பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு முடிவில்லாத் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, கச்சத்தீவை மீட்டு, நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டி இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண வேண்டியது நமது கடமையாகும்.
இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொண்டு வெகு விரைவில் ஒரு இணக்கமான நிரந்தரத்தீர்வை எட்டிட மத்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து முயற்சி செய்யும் என நம்புகிறேன்.
ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிப்பதற்காக சூரை மீன்பிடிப் படகுகளைப் பயன் படுத்துவதை ஊக்கு விக்க இந்த அரசு எடுத்து வரும் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.
பாக். நீரிணைப்புப் பகுதியில் மீன்பிடிப்பைக் குறைக்கவும், இதுவரை அதிகம் பயன்படுத்தப்படாத ஆழ்கடல் மீன்வள ஆதாரங்களைப் பயன்படுத்தும் வகையில் ஆழ்கடல் மீன்பிடித் திறனை விரிவு படுத்தவும், இந்த அரசால் கோரப்பட்டுள்ள, 1,520 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஆழ்கடல் மீன்பிடிப்பு மற்றும் அதற்குத் தேவைப்படும் கட்டமைப்பிற்கான மொத்த நிதியுதவியை விரைந்து அளிக்குமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு ஆளுநர் ரோசய்யா தமது உரையில் தெரிவித்துள்ளார்.