விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் டிஸ்மிஸ்?... அவசரமாக தமிழகம் வந்தார் ஆளுநர்
அமைச்சர் விஜயபாஸ்கர், அத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த 3 அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக பொறுப்பு ஆளுநர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவசரமாக சென்னைக்கு வந்துள்ளார். இதனால் சர்ச்சையில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா தொடர்பாக வருமான வரித்துறையினர் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்தினர்.
இந்த அதிரடி சோதனையின்போது, ரூ.89 கோடி அளவுக்கு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணத்தை இறைத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கி அதிர வைத்தன.
விஜயபாஸ்கர் வீட்டில்...
வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டபோது அங்குவந்த டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏதோ ரகசிய ஆவணங்களை மறைமுகமாக கொடுத்ததாகவும், அதை ஆடைக்குள் மறைத்து வைத்த போது அதிகாரிகள் பார்த்துவிட்டதாகவும் தெரிகிறது. இதைத் தொடர்ந்து அந்த ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அமைச்சர் ரகளை
மேலும் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வந்த அமைச்சர்கள் காமராஜும், உடுமலை ராதாகிருஷ்ணனும், நடிகர் சரத்குமாருக்கு வீட்டுக்கு சென்ற கடம்பூர் ராஜுவும் அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 அமைச்சர்கள் உள்பட தளவாய் சுந்தரம் ஆகியோர் மீது காவல்துறை ஆணையர் கரண் சின்ஹாவிடம் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு
அதன்பேரில் அபிராமபுரம் போலீஸார் அந்த 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வந்தது. இதுதொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியபோது உங்கள் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றிவிடுவேன் என்று விஜயபாஸ்கர் மிரட்டல் விடுத்தார். இதனால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் எடப்பாடியார் தவித்தார்.
சென்னை வருகை
இந்த சூழ்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து அவசர அவசரமாக சென்னைக்கு வந்துள்ளார். இதனால் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, காமராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.