மதுரையில் 176 அடி உயர தமிழ்தாய் சிலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது - எல்லாம் வாஸ்துதான்!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை விட உயரமாக எந்த சிலையோ கட்டிடமோ இருக்கக் கூடாது என்பதால் 176 அடி உயர தமிழ்தாய் அமைக்கும் சிலை கைவிடப்பட்டுள்ளது.
சென்னை: மதுரையில் 176 அடி உயர சிலை 120 கோடி ரூபாயில் அமைக்கப்படும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கண்காட்சி அமைத்து அதில் சிலை அமைக்கப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
கடந்த 2013ஆம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிக்கை வாசித்த அப்போதய முதல்வர் ஜெயலலிதா, மதுரையில் பிரம்மாண்ட தமிழன்னை சிலை நிறுவப்படும் என்று கூறினார்.
மதுரையில் ரூ.120 கோடி மதிப்பீட்டில் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதாவில் அறிவிக்கப்பட்ட தமிழ்தாய் சிலை நிறுவும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
தமிழ்தாய் சிலை
இது அரசின் சாதனைப் பட்டியலிலும் வெளியிடப்பட்டது. இதற்காக முதலில் வண்டியூர், அடுத்து திருப்பரங்குன்றத்தில் உள்ள தென்கால் கண்மாய்கள் தேர்வு செய்யப்பட்டன. பின்னர் இரு கண்மாய்களும் நிராகரிக்கப்பட்டன. இதன் பிறகு மாடக்குளம், நிலையூர், துவரிமான் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கண்மாய்களை ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியும் இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
நிறைவேறாத திட்டம்
2013ஆம் ஆண்டு திட்டத்தை அறிவித்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் இந்த கோப்புகளின் மீது எந்த முடிவு எடுக்கப்படாமல் இருந்தது. மதுரை தல்லாகுளம் கண்மாயில் கட்டப்பட்டுள்ள உலக தமிழ் சங்க கட்டிடம் அருகே கட்டி தண்ணீர் நிரப்ப முடியுமா? என ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் நிறைவேற்ற முடியவில்லை.
மீனாட்சி கோவில் கோபுரம்
வண்டியூர் கண்மாய் குறித்த விவரங்களில் மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் நேர்கோட்டில் அமைவது குறித்தும், அதைவிட உயரமாக சிலை அமைந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் அருகிலும் முருகன் கோயில் கோபுரம் அமைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டது. இதனால் வாஸ்து பார்க்கப்பட்டு எந்த முடிவு எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
அருங்காட்சியகம்
ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ரோமில் உள்ள அருங்காட்சியகம் போல மதுரையில் உலக தமிழ் சங்க கட்டிடம் அருகே அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் தமிழன்னை சிலை நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.
மாஃபா பாண்டியராஜன்
சுற்றுச்சூழல்துறை அனுமதி கிடைக்கவில்லை என்று கூறிய அமைச்சர் பாண்டியராஜன், மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தை விட எந்த சிலைகளோ கட்டிடமோ இருக்கக் கூடாது என்பதன் அடிப்படையில் மாற்று ஏற்பாடாக 50 கோடி ரூபாய்க்கு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு தமிழன்னை சிலை நிறுவப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.