அனிதா தற்கொலை: கிருஷ்ணசாமி கோரிக்கையை ஏற்று விசாரணை கமிஷன் அமைக்கிறது தமிழக அரசு?
அனிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனை அமைக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட இருக்கிறது.
சென்னை: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையின் அடிப்படையில் அனிதாவின் மரணம் குறித்து தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைக்க உள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நீட் தேர்வால் மருத்துவ படிப்பு கன்வை தொலைத்த மாணவி அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தமிழகத்தையே இது கொந்தளிக்க வைத்திருக்கிறது.
கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் மாணவி அனிதா எதற்காக இறந்தார் என்பதை ஆராயாமலேயே அது இன்னொரு விவகாரத்தோடு முடிச்சு போடப்படுகிறது எனக் கொளுத்திப் போட்டார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி.
அடித்து விடும் கிருஷ்ணசாமி
அத்துடன், மாணவியை உச்ச நீதிமன்றம் வரையில் அழைத்துச் சென்று வழக்கு நடத்த உதவி புரிந்த தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சிவசங்கர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோரை தீவிரமாக விசாரிக்க வேண்டும் எனவும் பேட்டியளித்து மக்களின் அதிருப்திக்குள்ளானார் கிருஷ்ணசாமி. அவரது கருத்துக்களுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
பதிலடி தந்த பாலபாரதி
இதுகுறித்து கருத்து பதிவிட்ட முன்னாள் சி.பி.எம் எம்.எல்.ஏ பாலபாரதி, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் குறைந்த தன்னுடைய மகளுக்காக ஜெயலலிதாவிடம் பேசி மருத்துவம் படிக்க இடம் வாங்கியவர் கிருஷ்ணசாமி' என அதிர வைத்தார். இந்நிலையில், தன் மீது விழும் கடுமையான விமர்சனங்களை திசை திருப்ப, இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்திருக்கிறார் கிருஷ்ணசாமி.
விசாரணை கமிஷன்
அந்த மனுவில், மாணவி அனிதா மரணத்தில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் எனத் வலியுறுத்தினார். மேலும் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்து, மருத்துவம் படிக்கத் தேர்வாகவில்லை. மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால், வேளாண்மை படிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இந்த நேரத்தில் அனிதா தற்கொலை செய்து கொண்டதை நம்ப முடியவில்லை. சிவசங்கர், கஜேந்திரபாபு ஆகியோர் டெல்லி வரையில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஸ்டாலினை சந்திக்க வைத்திருக்கிறார்கள். ஏழை எளிய அனிதாவை நீட் தேர்வுக்கு எதிரான பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளனர். அவருக்கு கொடுக்கப்பட்ட தேவையற்ற அழுத்தங்கள்தான் மரணத்துக்குக் காரணம் அல்லது வேறு ஏதேனும் வகையில் மரணம் நிகழ்ந்ததா என நீதியரசர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
விரைவில் அறிவிப்பு
கிருஷ்ணசாமியின் பேட்டிக்கு அங்கேயே செய்தியாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே தற்போதைய போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், டாக்டர் கிருஷ்ணசாமியின் கோரிக்கையை ஏற்று அனிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.