சத்தீஸ்கரில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதி - முதல்வர் அறிவிப்பு
சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..
சென்னை: சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தெற்கு பஸ்தார் பகுதியில் நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அந்த மாவட்டத்தின் பர்கபால் - சிந்தாகுவா பகுதியில் நேற்று மதியம் 12.25 மணி அளவில் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த நக்சலைட்கள், வீரர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தமிழக வீரர்கள் 4 பேர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர்.
சேலம் கெங்கவல்லியை சேர்ந்த திருமுருகன்,தஞ்சை நல்லூரை சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் நீடாமங்கலத்தை சேர்ந்த செந்தில்குமார்,மதுரை பெரியபூலாம்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி ஆகிய வீரர்கள் மரணமடைந்துள்ளனர்.
20 லட்சம் நிதி உதவி
சத்தீஸ்கரில் நக்சல்கள் தாக்குதலில் உயிரிழந்த 4 தமிழக வீரர்கள் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்கள் 4 பேர் குடும்பத்துக்கு முதல்வர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், இந்திய நாட்டின் உள்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மு.பத்மநாபன், நீடாமங்கலம் வட்டம், காமராஜர் காலனியைச் சேர்ந்த நாராயணன் என்பவரின் மகன் நா.செந்தில்குமார், சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் ந.திருமுருகன் மற்றும் மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், முத்துநாகலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைஅழகு என்பவரின் மகன் பி.அழகுபாண்டி ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் காவல் படை துணை ராணுவ வீரர்கள் (CRPF), 24.4.2017 அன்று உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்தேன்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர்கள் மு.பத்மநாபன், நா.செந்தில்குமார், ந.திருமுருகன், மற்றும் பி.அழகுபாண்டி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா இருபது லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.