மணப்பாடு படகு விபத்து: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா. ரூ.2 லட்சம் நிதி.. அரசு
மணப்பாடு அருகே நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை அரசு அறிவித்துள்ளது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகே நேற்று நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் அரசு நிவாரண உதவியும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் அறிவிக்கப்பட்டுள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே உள்ள கடற்கரை கிராமம் மணப்பாடு. பழமையான கலங்கரைவிளக்கம், தேவாலயம், அதிக ஆழமில்லாத, அலைகள் இல்லாத கடற்கரை என்பதால் குட்டி கோவா என அழைக்கப்படுகிறது.
விடுமுறை நாட்களில் இங்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நேற்றும் அங்கு துாத்துக்குடி மாவட்டம் படுக்கபத்து அருகே அழகம்மன்புரத்தை சேர்ந்த குடும்பத்தினர் சுற்றுலா வந்திருந்தனர்.
மீனவர் ஒருவரின் படகை வாடகைக்கு பேசி கடலுக்குள் கிளம்பினர். சுமார் 5 பேர் மட்டும் செல்லும் பைபர் படகில் குழந்தைகள், பெண்கள் என 30க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.
மாலை 5 மணிவாக்கில் கிளம்பிய படகு சுமார் 100 மீட்டர் துாரம்தான் கடலுக்குள் சென்றிருந்தது. திடீரென பெரிய அலை அடித்தது. அலையில் சிக்கிய படகு, பாரம் தாங்காமல் கவிழ்ந்தது. நீச்சல் தெரிந்தவர்கள் தத்தளித்தனர். பெண்கள், சிறுவர்கள் நீரில் மூழ்கினர். கடற்கரையில் மீன்பிடி உபகரணங்களை சரிசெய்துகொண்டிருந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் ஜெயராமன் மனைவி முத்துசெல்வி 36, திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் மனைவி சுகன்யா 28, ஆறுமுககொடியின் மனைவி உஷாராணி 40, சுந்தரராஜ் மனைவி முருகேஸ்வரி 30, ஆறுமுக கொடி மகன் சுந்தரேசன் 7, வரதராஜன் மகன் சுரேந்திரன் 10, ஜெயராமன்
42, கணேசன் மனைவி முத்துலட்சுமி 20, சுந்தரராஜனின் மகன் ஆகாஷ் 9 ஆகிய 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 20 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இன்று காலையில் சிறுமி அபிநயாவின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.
படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிதியுதவி அறிவித்துள்ளார். அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.