மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்க மாட்டோம் - ஹைகோர்ட்டில் அரசு உறுதி
மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை: மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மதுக்கடைக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராட போலீஸ் அனுமதி தருகிறது என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கிராமசபை எதிர்த்தால் மதுக்கடை திறக்கக்கூடாது என்ற தடை உத்தரவு நீடிக்கிறது. டாஸ்மாக் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தடையை நீக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் கல்யாணசுந்தரம், சுப்பிரமணியம் அமர்வு டாஸ்மாக் நிறுவன மனுவை விசாரித்தது. மக்கள் எதிர்க்கும் இடங்களில் மதுக்கடை திறக்கப்படுவதில்லை என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மதுக்கடைக்கு எதிராக ஜனநாயக முறைப்படி போராட போலீஸ் அனுமதி தருகிறது என்றும் அரசு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார்.
3 ஆயிரம் கடைகளை மூடி வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய உள்ளோம் என அரசு தெரிவித்துள்ளது. 3 ஆயிரம் கடைகள் மாற்றப்பட உள்ள நிலையில் 12 வழக்குகளே வந்துள்ளன என்றும் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே போராட்டக்காரர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என நீதிபதியிடம் வழக்கறிஞர் கூறினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மதுக்கடைகளை மாற்றி அமைக்கும் கொள்கையை அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் வரவேற்போம் என்று கூறிய நீதிபதிகள், டாஸ்மாக் நிறுவன மேல்முறையீட்டை வழக்கை முடித்து வைத்தனர்.