ராஜீவ் வழக்கு: 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை- தீர்மானம் செல்லாது- மத்திய அரசு
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமே இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது. ஆனால் இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இதனையடுத்து தங்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவு செய்துவிட்ட பின்னரும் விடுதலை செய்யாமல் இருப்பது சட்டவிரோத காவல் என்று கூறி நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் இன்று இறுதிகட்ட வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அப்போது மத்திய அரசின் கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபால், மத்திய அரசின் கீழ் உள்ள சிபிஐ தொடர்ந்த வழக்கு இது என்பதால் மத்திய அரசின் பரிந்துரை இல்லாமல் 7 பேரையும் விடுதலை செய்யவே முடியாது; தமிழக அரசு பரிந்துரைத்திருப்பதும் அமைச்சரவை தீர்மானம் என்பதும் பூஜ்ஜியம்தான் என வாதிட்டார்.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் நடராஜன் வாதிடுகையில், ஆளுநருக்கு பரிந்துரைப்பதுடன் தமிழக அரசின் கடமை முடிந்துவிட்டது; இனி ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும்; இதில் தலையிட முடியாது என்றார்.
ஆனால் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மத்திய அரசின் வழக்கறிஞர் பேசுவது நீதிமன்ற அவமதிப்பு; அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறினார். பின்னர் இருதரப்பையும் எழுத்துப்பூர்வமாக வாதங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.