ஆடு, மாடு, லேப்டாப், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்
ஏழை பெண்களுக்கு இலவச ஆடு,மாடு வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம், 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று பட்ஜெட்டில் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ஏழைப் பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும் என்று ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது கடந்த 5 ஆண்டுகளாக ஏழை பெண்களுக்கு இலவச ஆடு மாடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அவரது மறைவிற்குப் பிறகும் ஆடு மாடு வழங்கும் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டங்களுக்காக 2017 -18ல் நிதியமைச்சர் ஜெயக்குமார் நிதி ஒதுக்கியுள்ளார்.
இதேபோல 100 யூனிட் இலவச மின்சார திட்டம், இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடரும் என்றும் ஜெயக்குமார் சட்டசபையில் அறிவித்துள்ளார்.
இலவச ஆடு மாடு திட்டம்
கால்நடை பராமரிப்புக்கு பட்ஜெட்டில் ரூ.1,161 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். ஊரக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு. ஏழைப் பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும்.
நாட்டு மாடுகள்
25 கால்நடை கிளை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கும்.
கல்லூரிகளில் ஆவின் பால் நிலையம்
கல்லூரிகளில் 200 புதிய ஆவின் பால் நிலையங்கள் உருவாக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் மதுரையில் ரூ.40 கோடி செலவில் பால் பதப்படுத்தும் நிலையம் புதியதாக தொடங்கப்படும் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
மடிக்கணினி
2017-18-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளியாகவும் 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலையாகவும் உயரும் என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க ரூ.758 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் 2017-18ம் ஆண்டு பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கு ரூ. 26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
தொடரும் இலவசங்கள்
100 யூனிட் மின்சாரம் தொடரும் இலவச வேட்டி சேலை திட்டம் தொடரும் என்றும் ஜெயக்குமார் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். அம்மா மகப்பேறு திட்டம், சஞ்சீவி திட்டம், என அனைத்து திட்டங்களும் தொடரும் என அறிவித்துள்ளார் ஜெயக்குமார். தமிழக அரசை 4 லட்சம் கோடி அளவிற்கு கடன் சுமை கழுத்தை நெரித்தாலும் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் அறிவித்த இலவச திட்டங்களை நிறுத்தாமல் அதற்கு நிதி ஒதுக்கியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.