மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் அனுமதி தரவில்லை - முதல்வர் பழனிச்சாமி
கர்நாடகாவில் அணைகட்ட தடையில்லை என்று தமிழகம் கூறியதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருவாரூர்: மேகதாதுவில் கர்நாடகா அணைகட்ட தமிழகம் அனுமதி அளித்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
திருவாரூரில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காவிரி மீட்புக்குழுவினர் கறுப்புக்கொடி ஆர்பாட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடகா அணைகட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை என்று கூறினர். பத்திரிக்கையில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என்று கூறினார்.
தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றும் எதிரான அரசு இல்லை என்று கூறிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தின் நதிநீர் உரிமையை ஒருபோதும் விட்டுத்தரமாட்டோம் என்று கூறினார்.