தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஸ்டிரைக் தொடங்கியது- மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்!
தமிழக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியுள்ளது.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; 7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோவின் ஒரு பிரிவினர் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.
ஆனால் மற்றொரு ஜாக்டோ ஜியோ பிரிவினர் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதனடிப்படையில் இன்று வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.
கோவை உள்ளிட்ட பல நகரங்களில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது.