ஆடுபுலி ஆட்டம், கிட்டிப்புல், பம்பரம், தாயம், பல்லாங்குழி, சில்நொண்டி இதெல்லாம் தெரியுமா?
சென்னை: ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரு பூத்துச்சாம்...
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டு பூ பூத்துச்சாம்...
என்ற பாடல்களை எல்லாம் இப்போது கிராமங்களில் கேட்க முடிவதில்லை....
சிறியதும் பெரியதுமாய் குச்சிகளை வைத்துக்கொண்டு கிட்டிப்புல் யாரும் விளையாடுவதில்லை. காரணம் எல்லோரும் இப்போது கிரிக்கெட் விளையாடத்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.
இல்லையெனில் கணினியில் விளையாட அமர்ந்து விடுகின்றனர்.
தாயம், பல்லாங்குழி, சில்நொண்டி என பெண் குழந்தைகள் கிராமங்களில் விளையாடும் விளையாட்டுக்கள் அழிந்து வருகின்றன.
இந்த விளையாட்டுக்களைப் பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் தற்கால குழந்தைகளுக்கும் தெரியும் வகையில் இந்த பாரம்பரிய விளையாட்டுகளை மீண்டும் தொடர தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
கிராம விளையாட்டுக்கள்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தஞ்சாவூரில் முதன்முதலாக கிராமப்புற விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கலைகளையும், விளையாட்டுகளையும் ஊக்குவிக்கும் வகையில் முதன்முதலாக தஞ்சாவூர் திருவிழா என்ற பாரம்பரிய விழா துவங்கியுள்ளது.
ஆண்டுதோறும்
மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் முதல் நிகழ்ச்சியாக கிராமப்புற பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் துவங்கியுள்ளன. இந்தப்போட்டி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஆர்வம்
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, அரியலுர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இந்த விளையாட்டு போட்டிகளில் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
மனதிற்கு உற்சாகம்
கணினியில் விளையாட்டுகள் விளையாடுவதைவிட இந்த பாரம்பரிய விளையாட்டுகளில் பங்கேற்பது தங்களுக்கு மன,உடல் ரீதியாக உற்சாகம் அளிப்பதாக மாணவ.மாணவிகள் தெரிவித்தனர். மேலும் இந்த போட்டியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும். பங்கேற்று விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மீட்டெடுக்கும் நிகழ்ச்சி
அனைவருக்கும் உற்சாகமளிக்கும் வகையில் தமிழகத்திலேயே பாரம்பரிய கிராமப்புற விளையாட்டுகளை மீட்டெடுக்கும் நிகழ்வாக தஞ்சையில் இந்தவிழா நடைபெறுகிறது.
தமிழக அரசு ஆணை
பாரம்பரிய விளையாட்டுக்களை மீட்டெடுக்க அரசு ஆணை போட்டதோடு நின்றுவிடாமல், மாவட்ட நிர்வாகங்கள் மூலம் இதுபோன்ற விளையாட்டுக்களை நடத்தினால் நம் சந்ததியினர் இதுபோன்ற விளையாட்டுக்களின் அருமையை தெரிந்து கொள்வார்கள் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.