தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு:அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தமிழக சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதவி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டம் ஒழுங்கு கூடுதல் பொறுப்பு டிஜிபியாக பதவி வகித்த டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையுள்ளது. அவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் டிஜிபியாக பணி நீட்டிப்பு வழங்கியுள்ளது தமிழக அரசு.
தமிழகத்தின் உளவுத்துறை டிஜிபியாக உள்ள டி.கே. ராஜேந்திரன் கூடுதல் பொறுப்பாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும் கவனித்து வருகிறார். வெள்ளிக்கிழமையான இன்று இவர் பணி ஓய்வு பெறுவதால், புதிய டிஜிபியை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை தீவிரமாக நடைபெற்று வந்தது.
2006ஆம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றில், டி.ஜி.பி. நியமனத்தில் சீர்திருத்தங்களை மேற்கொண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பதவி மூப்பின் அடிப்படையில் டிஜிபியாக பதவிக்கு தகுதியான 5 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையத்திடம் மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும். அவர்களில் 3 பேரை மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுக்கும். அந்த மூவரில் ஒருவர் டிஜிபியாக தேர்வு செய்யப்படுவார்.
இந்த நடைமுறைப்படி, மத்திய எல்லை ஆயுதப்படை பிரிவு தலைவராக உள்ள அர்ச்சனா ராமசுந்தரம், சிவில் சப்ளை டிஜிபி கே. ராதாகிருஷ்ணன், தீயணைப்புத்துறை இயக்குநர் ஜார்ஜ், தற்போதைய பொறுப்பு டிஜிபியாக உள்ள டி. கே. ராஜேந்திரன், தமிழ்நாடு மின்வாரிய விஜிலென்ஸ் டிஜிபி மகேந்திரன் ஆகியோரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தப் பட்டியலை வியாழனன்று டெல்லியில் நடந்த மத்திய பணியாளர் தேர்வாணைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சமர்ப்பித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் உள்ள ஜார்ஜ், டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் குட்கா சர்ச்சையில் சிக்கியுள்ளதால், மீதமுள்ளவர்களில் ஒருவரே டிஜிபியாக நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
ஆனால் பொறுப்பு டிஜிபியாக உள்ள டி.கே.ராஜேந்திரனின் பதவிக்காலம் மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு அவர் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.