ஜெ.-சோபன் பாபு மகள் எனும் அம்ருதா மீது தமிழக அரசு விரைவில் அவதூறு வழக்கு?
ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகள் என கூறும் அம்ருதா மீது தமிழக அரசு விரைவில் வழக்கு தொடர உள்ளது.
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவுக்கும சோபன் பாபுவுக்கும் பிறந்த மகள் தாமே என அணுகுண்டை வீசும் அம்ருதா மீது தமிழக அரசு விரைவில் அவதூறு வழக்கு போடக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அவர் குறித்த புனிதப் பிம்பத்தை உடைக்கும் வகையிலேயே செய்திகள் வெளியாகின்றன. ஜெயலலிதாவுக்கு மகள் இருக்கிறார் என்ற செய்தியைத் தாண்டி, இரண்டு குழந்தைகள் என்றெல்லாம் தகவல்கள் பரவுகின்றன.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நான் தான் ஜெயலலிதாவின் மகள். சந்தேகம் இருந்தால் டிஎன்ஏ சோதனை செய்துகொள்ளுங்கள்' எனக் கூறியிருப்பது அ.தி.மு.க தொண்டர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மூதாதையர் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருந்தாலும் மைசூருவிலும் மாண்டியா அருகேயுள்ள மேல்கோட்டையிலும் வாழ்ந்தனர். மேல்கோட்டையில் பிறந்த ஜெயலலிதா, தந்தையின் மறைவுக்கு பிறகு பெங்களூருவுக்குச் சென்றுவிட்டார்.
தனிமையில் ஜெ
சந்தியா நடிகையான பிறகு, ஜெயலலிதாவுடன் சென்னைக்கு இடம்பெயர்ந்தார். கர்நாடகாவில் வசிக்கும் சிலர், ஜெயலலிதாவின் அண்ணன்', 'ஜெயலலிதாவின் தங்கை' என்றெல்லாம் கிளம்பினாலும், அண்ணன் ஜெயக்குமாரை தவிர வேறு யாரையும் தனது ரத்த உறவுகளாக அவர் ஏற்றுக் கொண்டதில்லை.
கோபத்தில் ஜெ.
அண்ணன் என்று கூறிய வாசுதேவனையும் பெங்களூரு சைலஜாவையும் அவர் பக்கத்தில் கூட அண்டவிடவில்லை. பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதா ஆஜரானபோதும் சிறையில் அடைக்கப்பட்டபோதும் அவரைச் சந்திக்க சைலஜா முயற்சித்தார். ஆனால் ஜெயலலிதா அவரை பார்க்க அனுமதிக்காததால், நான் தான் ஜெயலலிதாவின் தங்கை எனச் சவால் விட்டார்.
அம்ருதா விஸ்வரூபம்
இதனால் கோபமடைந்த ஜெயலலிதா, சைலஜாவின் பேட்டியை வெளியிட்ட பத்திரிகைகள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். கடைசிவரை ஜெயலலிதாவை சந்திக்காமலே சைலஜா காலமானார். சில மாதங்களுக்கு முன்பு, ‘நான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். எனது தாயாருக்கு ஐயங்கார் முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெறாததால், என்னை இறுதி சடங்கு செய்ய அனுமதிக்க வேண்டும்' என பிரதமர், குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்குக் கடிதம் அனுப்பினார் அம்ருதா.
அனுதாபிகள் ஆதங்கம்
இதுநாள் வரையில் இல்லாத அளவுக்கு ஜெயலலிதாவுக்கு வாரிசு இருப்பதாக வெளியாகும் தகவல்களுக்கு அரசுத் தரப்பில் இருந்து கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருக்க வேண்டும். அதுகுறித்த எந்த யோசனையும் அமைச்சர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தொலைக்காட்சி விவாதங்களில் பேசுகின்ற அ.தி.மு.கவினர் மட்டுமே இதனைக் கடுமையாகக் கண்டிக்கின்றனர் என்கின்றனர் ஜெயலலிதா அனுதாபிகள்.
பின்னணி குறித்து விசாரணை
மீடியாக்களில் தொடர்ச்சியாக அம்ருதா குறித்து வெளியாகும் தகவல்களை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உளவுத்துறை அதிகாரிகளை களத்தில் இறக்கியிருக்கிறார். அவர்கள் அம்ருதாவின் முழு ஜாதகத்தையும் எடுத்துக் கொடுத்துள்ளனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை, சைலஜாவின் பின்னணி, அவர்களை இயக்குவது யார் என்பது குறித்த விவரங்களை அளித்திருக்கின்றனர். இதையொட்டி, அரசுத் தரப்பில் வழக்குத் தொடர்வது குறித்தும் முதல்வர் அலுவலக வட்டாரம் ஆலோசித்து வருகிறது என்கின்றனர் கோட்டை வட்டாரத்தில்.