இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகள் மூடல்.. தென்காசியில் குடிமகன்கள் திண்டாட்டம்
உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தென்காசியில் இயங்கி வந்த 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.
தென்காசி: தென்காசி பகுதியில் இரவோடு இரவாக 10 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தின் நெடுஞ்சாலைகளில் இயங்கும் டாஸ்மாக் கடைகளால் அதிக அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகையால், அக்கடைகளை மூட வேண்டும் என சமூக நீதிக்கான பேரவையின் தலைவர் கே. பாலு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் நெடுஞ்சாலைகளில் இயங்கி வந்த மதுபான கடைகளை மூட உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மட்டும் 3321 டாஸ்மாக் கடைகள் மூட உத்திரவிட்டுள்ளதைத் தொடர்ந்து தென்காசி நகராட்சி பகுதிகளில் புதிய பேருந்து நிலையம், பழைய பேரூந்து நிலையம், அரசு பணிமனை ஆகிய பகுதிகளில் இருந்த 10 டாஸ்மாக் கடைகளும், குற்றாலத்தில் உள்ள 2 கடைகளில் ஒரு கடையும், தமிழக கேரளா எல்லையான
பிரானூர் பார்டரில் ஒரு கடையும் நேற்று நள்ளிரவு முதல் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தென்காசி பகுதியில் அச்சன்புதூர், சுந்த்ரபாண்டியபுரம், குற்றாலம் செங்கோட்டை வல்லம் ரோடு ஆகிய சில பகுதிகளில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மதுபான பிரியர்கள் சரக்கு கிடைக்காமல் கூட்டம் ஆங்காங்கே அலைமோதி வருகின்றனர். செங்கோட்டை வல்லம் ரோட்டிலுள்ள கடையில் சரக்கு வாங்க வெளியூர்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு வந்து சரக்குகளை வாங்கி சென்ற வண்ணம் உள்ளனர்.
அங்கு இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சரக்கு விலையில் கூடுதல் விலைக்கு கடை ஊழியர்கள் விற்பனைசெய்து வருவதாகவும், அட்டைபெட்டிகளில் கள்ளத்தனமாக மொத்தமாக சரக்குகளை விற்ப்பனை செய்வதாகவும், சரக்கு விலைபோக மீதி சில்லறைகளை வழங்காமல் இருப்பாதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.