அப்பாவி பெண்ணை கைது செய்த போலீஸ்: மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.2 லட்சம் ஹைகோர்ட் அபராதம்
சென்னை: தேடப்படும் குற்றவாளி என்று அப்பாவி பெண்ணை ஆள் மாறாட்டத்தின் பெயரில் கைது செய்ததற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தும், இந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும் என்றும் சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்தவர் சாரா தாமஸ், 40. இவர், கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தார். விமான நிலையத்தில் இருந்த குடியுரிமை அதிகாரிகளும், மாநில போலீசாரும் அவரை கைது செய்தனர்.
கேரளம் மாநிலம், புனலூரைச் சேர்ந்தவர் கெவின் ஜான் சஜித். இவரது தாயார் சாரா தாமஸ் கிழக்குத் தாம்பரத்தில் வசித்து வந்தார். கொல்லத்தில் உள்ள ஒரு குற்ற வழக்கில் சாரா வில்லியம்ஸ் என்பவரை சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு சாரா தாமஸ் வந்த போது, அது சாரா வில்லியம்ஸ் எனக் கருதி அவரை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அதன் பிறகு, புனலூர் மாஜிஸ்திரேட் முன்பு சாரா தாமஸ் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது மாஜிஸ்திரேட் முன்பு போலீஸார் தாக்கல் செய்த அறிக்கையில், தேடப்படும் குற்றவாளி இவர் இல்லை எனவும், தவறுதலாக கைது செய்யப்பட்டுவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
சாரா தாமசும், சாரா வில்லியம்ஸ் என்பவரும் 1975ஆம் ஆண்டு பிறந்துள்ளனர். மேலும், பெயர்கள் ஒரே மாதிரி இருந்ததால் அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். இருந்தாலும், சாரா தாமஸ் மீது வழக்கு இல்லை என்று தெரிந்ததும், கேரள நீதிமன்றம் அவரை விடுவித்தது. எனவே, இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட சாரா தாமசை கேரளா கோர்ட்டு விடுதலை செய்தது. இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் சாரா தாமசின் மகன் கேவின்ஜான் சாஜித் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குடியுரிமை அதிகாரி ராஜ் நாராயண்சிங் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார். அதில், சாரா தாமஸ் பழைய பாஸ்போர்டில் சாரம்மா தாமஸ் என்று இருந்தது. பின்னர், சாரா தாமஸ் என்று தன் பெயரை அவர் மாற்றி, புதிய பாஸ்போர்ட்டினை வாங்கியுள்ளார்.
சர்வதேச போலீசாரால் தேடப்படும் குற்றவாளியான சாரம்மா தாஸ் என்ற சாரா வில்லியம்சும், சாரா தாமசும் 1975ம் ஆண்டு பிறந்தவர்கள். சாரம்மா தாமஸ் என்ற பெயரில் பழைய பாஸ்போட் வைத்திருந்ததால், ஆள் மாறாட்டத்தின் காரணமாக சாரா தாமசை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனவே, இந்த ஆட்கொணர்வு மனுவை முடித்து வைக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் நேற்று தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில் நீதிபதிகள்,
ஆள் மாறாட்டத்தினால் சாரா தாமசை, குடியுரிமை அதிகாரிகளும், தமிழக போலீசாரும் விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர். பின்னர் அவரை 4 நாட்கள் சிறையிலும் அடைத்துள்ளனர். எனவே, சாரா தாமசுக்கு, மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு வழங்கவேண்டும். ஆனால், இந்த இழப்பீடு தனக்கு வேண்டாம் என்றும், சமூக சேவை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கவேண்டும் என்றும் சாரா தாமஸ் கூறியுள்ளார்.
எனவே, மத்திய, மாநில அரசுகளுக்கு ரூ.2 லட்சத்தை அபராதமாக விதிக்கிறோம். இந்த தொகையை, கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்றடையும் விதமாக, தமிழ்நாடு முதல்வர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கவேண்டும். மேலும், தவறு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது மத்திய, மாநில அரசுகளின் விருப்பத்தை பொருத்தது. அதேநேரம், சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு நபரை பிடிக்கும்போது, அவர்களது பாஸ்போட்டு, விசா போன்ற ஆவணங்களை அதிகாரிகள் எச்சரிக்கையுடன் ஆய்வு செய்யவேண்டும்.
தேடப்படும் குற்றவாளியின் புகைபடத்துடன், பிடிப்பட்டவரின் புகைபடத்தை வைத்து சரி பார்க்கவேண்டும். வயது, முகவரி உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் சரியான விசாரணை மேற்கொள்ளவேண்டும். தேவையில்லாமல் எந்த ஒரு நபரையும், குறிப்பாக பெண்களையும் கைது செய்து சிறையில் அடைக்கக்கூடாது. அவ்வாறு செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான், இந்த தவறுக்கு பொறுப்பாவார்கள். என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.