தமிழக அரசை யார் கட்டுப்படுத்தினாலும் தோல்விதான்.... அமைச்சர் கேபி அன்பழகன் பொளேர்
மக்களுக்காக செயல்பட்டு வரும் தமிழக அரசை யார் கட்டுப்படுத்தினாலும் தோல்வி அடைவர் என்று அமைச்சர் கேபி அன்பழகன் தெரிவித்தார்.
தருமபுரி: தமிழகஅரசு தமிழக மக்களுக்காகத்தான் கட்டுப்படுமே தவிர, வேறு யார் கட்டுபடுத்த முயன்றாலும்அது தோல்வியில்தான் முடியும் என்று தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உயர்கல்வி கற்போரின் சதவீதத்தை அதிகரிக்க தமிழகம் முழுவதும் புதியதாக கலை அறிவியல் கல்லூரியில் 268 பாடப்பிரிவுகளும், பல்கலைக்கழகத்தில் 86 பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த பிரிவுகளில் திங்கள்கிழமை முதலே மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இதை வாய்ப்பை இழந்த மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். தமிழக அரசு பள்ளி இடைநிற்றலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை சதவீதம் 44.3% பெற்று உயர்ந்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் செயல்படும் கலை அறிவியல் கல்லூரிகளில் பல்வேறு புதிய பாடப்பிரிவுகள் இந்தாண்டு முதல் தொடங்கப்படும்.
இந்தாண்டு முதல் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட உள்ளது. இந்த கல்லூரி நிரந்தரமாக கட்டிடம் கட்டும் வரை, பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்படும். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில செயல்படும் பாலிடெக்னிக் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க அழுத்தம் கொடுத்து வருகிறது.
2018-19-ஆம் ஆண்டு பொறியியல் படிப்பிற்கு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. அதிமுக அரசு தமிழக மக்களுக்கு மட்டுமே கட்டுப்படும், யார் கட்டுப்படுத்த நினைத்தாலும், அது தோல்வியில்தான் முடியும்.
ரூ.135 கோடி மதிப்பில், பள்ளி, கல்லூரிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.