பிளஸ் ஒன், பிளஸ் டூவுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ்... அரசின் அடுத்த முடிவு
தமிழக அரசு பாடத்திட்டன் கீழ் கல்வி பயிலும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஒரே சான்றிதழை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை : பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதால் இனி பிளஸ் 2விற்கு தனி மதிப்பெண் அளிக்க வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு பாடத்தின் கீழ் படிக்கும் மாணவர்களின் கல்வி தரமானதாக இல்லை என்றும் இதற்கு முக்கிய காரணம், பாடத்திட்டம் தரம் வாய்ந்ததாக இல்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனிடையே நீட் போன்ற மத்திய அரசால் அறிவிக்கப்படும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதிலும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வாரம் பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன் இது குறித்து ஆலோசனையும் நடத்தினார்.
அதிரடிகள்
இதனையடுத்து பாடத்திட்டம மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. மேலும் பாடத்திட்டம் மாற்றம் உள்பட வேறு பல அதிரடி முடிவுகளையும் அரசு அறிவிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த ஆண்டு முதல் பள்ளி மாணவர்களுக்கு 3 வண்ண சீருடைகள் அளிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பதினோராம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு
இது வரை பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன. ஆனால் வரும் கல்வியாண்டு முதல் பதினோராம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
மதிப்பெண் குறைப்பு
10ம் வகுப்பு முதல் தொடர்ந்து 3 பொதுத் தேர்வை மாணவர்கள் சந்திக்க உள்ளதால், பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்ச்சி மதிப்பெண் முறையே 600+600 மொத்தம் ஆயிரத்து 200 மதிப்பெண் என்ற அடிப்படையில் தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. தற்போதைய நடைமுறையில் பிளஸ் 1 வகுப்பிற்கு ஆயிரத்து 200 மற்றும்+2 வகுப்பிற்கு 1,200 மதிப்பெண் என்று தேர்வு நடத்தப்படுகிறது.
ஒரே சான்றிதழ்
ஒரு வேளை பாடத்திட்டம் மாற்றப்பட்டு, +1 வகுப்பு பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்படும் பட்சத்தில் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1, பிளஸ் 2 இரண்டிற்கும் சேர்த்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசின் முடிவு மாணவர்களின் கல்வித்தரத்தை மாற்றும் என்றாலும் தொடர்ந்து 3 பொதுத் தேர்வாக என்று பயப்படும் மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.