கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாத மின்சாரம் வழங்கப்படுகிறது: சட்டசபையில் ஜெயலலிதா
சென்னை: தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தட்டுப்பாடு இல்லாமல் மின்சாரம் வழங்குகிறோம் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று தி.மு.க. உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி தொழில் துறை மீதான மானியக் கோரிக்கையில் பேசும்போது, தமிழ்நாட்டில் மின்வெட்டு ஓரளவு சீரடைந்துள்ளது என்று கூறினார்.
அப்போது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறுக்கிட்டு, தமிழ்நாட்டில் கடந்த 1-ந் தேதி முதல் மின்வெட்டு முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது. தொழிற்சாலைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, மின்சாரம் கட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
அமைச்சர் பேசிய முடித்த உடன் முதல்வர் ஜெயலலிதா எழுந்து, கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் 2008-ம் ஆண்டு தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்குவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அ.தி.மு.க. ஆட்சியில் அந்த கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டு தற்போது தட்டுப்பாடு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது என்றார்.