குற்றங்களை தடுக்க பொது இடங்களில் சிசிடிவி கேமரா: தூத்துக்குடி காவல்துறை உத்தரவு
சென்னை: தூத்துக்குடியில் குற்றங்களை எளிதில் தடுக்கவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும் பொது இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தவேண்டும் என்று மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
மாவட்ட காவல்துறை சார்பில் குற்ற நடவடிக்கைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி பெல்ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.
மாவட்ட எஸ்பி துரை தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். மாநகர காவல் துறை துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார்.
மருத்துவ கல்லூரி மருத்துவமனை சைலஸ் ஜெயமணி, காவல் ஆய்வாளர்கள் தில்லை நாகராஜன், ஹரிஹரன் மற்றும் வங்கி அலுவலர்கள், பள்ளிகளின் நிர்வாகிகள் மருத்துவமனைகளின் நிர்வாகிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குற்ற நடவடிக்கைகளை தடுப்பதற்காகவும், சட்ட ஒழுங்கு பிரச்னைகளை கண்காணிப்பதற்காகவும், மக்கள் கூடும் பொது இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
மருத்துவமனைகள், பள்ளிகள் கல்லூரிகள் விடுதிகள், நட்சத்திர ஹோட்டல்கள், பொது நூலகங்கள், தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் நகை கடைகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் காமிராக்கள் பொருத்தி காவல் துறைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளித்து குற்ற நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்றும், காலக்கெடு எதுவும் இல்லாமல் தாங்களாகவே காமிராக்களை பொருத்த வேண்டும் என்று மாநகர துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி தெரிவித்தார்.