வருவாய் குறைவான டாஸ்மாக் கடைகளை மூடுகிறது அரசு... விரைவில் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பூரண மது விலக்கு குறித்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், வருவாய் குறைவான மதுக் கடைகளை முதல் கட்டமாக மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக ஏற்கனவே தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகள் குறித்த ஒரு விரிவான பட்டியலை டாஸ்மாக் நிர்வாகம் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
அதில் உள்ளதில் வருவாய் குறைவான மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய இடங்களில் உள்ள கடைகளை முதல் கட்டமாக மூட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாம்.
சசிபெருமாள் மறைவைத் தொடர்ந்து
ஜூலை 31ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செல்போன் டவரில் ஏறிப் போராட்டம் நடத்தியபோது காந்தியவாதி சசி பெருமாள் திடீர் மரணமடைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மது விலக்குக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதில் இப்போது மாணவர்களும் உள்ளிழுக்கப்பட்டுள்ளனர்.
அரசு திடீர் ஆய்வு
இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகள் குறித்த ஆய்வு ஒன்றை தமிழக அரசு நடத்தியுள்ளது. இதுதொடர்பான முக்கிய அறிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் அரசிடம் அளித்துள்ளது.
போலீஸ் அறிக்கை
அதேபோல டாஸ்மாக் மதுக் கடைகள் குறித்தும் மது விலக்கு போராட்டங்கள் குறித்தும் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றும் உளவுத்துறையும் தமிழக அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.
கடைகள் குறித்த கணக்கெடுப்பு
தமிழகத்தில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், குடியிருப்புகளுக்கு மத்தியில், நெடுஞ்சாலைகளில் என எங்கெல்லாம் கடைகள் உள்ளன என்பது குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வருவாய்க் குறைவான
இதில் முதல் கட்டமாக வருவாய் குறைவான கடைகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாம். அதேபோல பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகளுக்கு அருகே உள்ள கடைகளும் அடுத்த கட்டமாக மூடப்படுமாம்.
சுதந்திர தினத்தன்று அறிவிப்பு
இதுகுறித்த முக்கிய அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின உரையின்போது அறிவிக்கலாம் என்று கூறப்படுகிறது.