தலைமைச் செயலக ஊழியர்கள் ஜம்மென்று வேலை பார்க்க நவீன 'ஜிம்'..!
சென்னை: புதுப்பிக்கப்பட்டு வரும் சென்னை தலைமைச் செயலகத்தின் வளாகத்தில் ஊழியர்களின் உடல் ஆரோக்கிய மேம்பாட்டுக்காக நவீன ஜிம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக்கவுள்ளார்.
ஆண் ஊழியர்களுக்கும், பெண் ஊழியர்களுக்கும் தனித் தனியாக இந்த ஜிம்மில் உடற்பயிற்சிக்கான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
விரைவில் இந்த ஜிம்மை முதல்வர் திறந்து வைப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமக்கல் கவிஞர் மாளிகை
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் ஒரு பகுதியில் தமிழக சட்டசபை மற்றும் தலைமை செயலகம் செயல்பட்டு வருகிறது. கோட்டையின் ஒரு பகுதியில் 10 மாடிகளுடன் நாமக்கல் கவிஞர் மாளிகை உள்ளது.
கருணாநிதி காலத்துக் கட்டடம்
கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் கட்டப்பட்டது இந்த நாமக்கல் கவிஞர் மாளிகை. இந்த கட்டிடத்தில் பெரும்பாலான அரசு துறைகளின் செயலாளர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
ரூ. 28 கோடியில் மாறும் முகம்
இந்த கட்டிடத்தின் முகப்பு தோற்றத்தை ரூ.28 கோடி மதிப்பில் சீரமைக்க தமிழக அரசு முடிவு செய்து, 2012-ம் ஆண்டு மே 31-ந் தேதி பணியை தொடங்கியது. இந்த பணியில் பொதுப்பணித்துறையின் கட்டிட பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்முன்னு வேலை பார்க்க ஜிம்…
இங்கு தலைமைச் செயலக ஊழியர்கள் நலன் கருதி உடற்பயிற்சி கூடம் ஆண், பெண்களுக்கு என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தைப் போக்கி
தலைமை செயலக ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்கி, திறம்பட பணியில் கவனம் செலுத்துவதற்காக தமிழக அரசு புதுப்பிக்கப்பட்டு வரும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் தரைதளத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக குளிர்சாதன வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடத்தை (ஜிம்) அமைக்க உத்தரவிட்டிருந்தது.
ஏரோபிக்ஸ்.. சைக்ளிங்
அதனடிப்படையில் தற்போது உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டு, ரூ.50 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கருவிகளும் வாங்கி பொறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக உடற்பயிற்சிக்கு தேவையான சைக்ளிங், டிரெட் மில், ஏரோபிக்ஸ் ஆகியவற்றுக்கான வசதிகள் இங்கு உள்ளன.
கொழுப்பு குறையும்
இந்த உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்துவதன் மூலம் உடலில் தசைகள் வலுப்படுத்துவதுடன், உடலில் இருக்கும் கொழுப்பும் அகற்றப்பட்டு கட்டுக்கோப்பான உடலையும் பெறமுடியும்.
கோச்சும் உண்டு…
மேலும் இங்கு பயிற்சிக்கு வரும் ஊழியர்களுக்கு பயிற்சியாளர்கள் மூலம் முறையான பயிற்சி அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
திறந்து வைக்கிறார் ஜெயலலிதா
தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் ஊழியர்கள் பயன்பாட்டுக்காக இந்த கட்டிடம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை, இம்மாத இறுதியில் முதல்வர் ஜெயலலிதா திறந்துவைக்கிறார்.