ஓகி புயலில் சிக்கிய 271 மீனவர்களை காணவில்லை... ஹைகோர்ட்டில் அரசு பதில்!
ஓகி புயலில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களில் 271 பேரை காணவில்லை என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளது
மதுரை: ஓகி புயலின் போது கடலுக்கு சென்றவர்களில் 271 மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கூறியுள்ளது.
ஓகி புயலின் போது காணாமல் போன 551 மீனவக்ரளை கண்டுபிடிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் 47 மீனவர்கள் நேற்று கரை திரும்பியுள்ளனர். 271 மீனவர்களை கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 25 படகுகளில் 900 நாட்டிகல் மைல் வரை மீனவர்களை தேடும் பணியானது நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ்க்கு முன்பாக அனைவரையும் கண்டுபிடித்து விடலாம் என்று அரசு கூறி இருக்கிறது. இதற்கு மனுதாரர் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது, தொடக்கம் முதலே அரசு தாமதமான நடவடிக்கை எடுப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.
உடன் இருந்த மீனவர்களை காணாமல் போனவர்கள் தேடி கடலுக்கு சென்றுள்ளனர். ஆனால் அரசு காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிப்பதில் அரசு மெத்தனமாக செயல்படுவதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
ஏற்கனவே மீனவர்கள் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், இன்று வாய்மொழி அறிக்கையாகவே அரசு இந்த பதிலை தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை தெரிவிக்க அரசு அவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை தெரிவிக்க அரசு அவகாசம் கோரியதால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.