ப்ளூவேல் மூலம் தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குறிய குற்றம்- தமிழக அரசு
ப்ளூவேல் விளையாட்டை பகிர்வதோ அதன் மூலம் தற்கொலைக்கு தூண்டுவதோ தண்டனைக்கு உரிய குற்றம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: ப்ளூவேல் தொடர்பான இணைப்புகளை பகிர்ந்தால் வழக்கு தொடரப்படும் என தமிழக டி.ஜி.பி. டி.கே. ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ப்ளூவேல் விளையாட்டை பகிர்வதோ அதன் மூலம் தற்கொலைக்கு தூண்டுவதோ தண்டனைக்கு உரிய குற்றம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ப்ளூவேல் விளையாட்டு அபாயகரமான விளையாட்டாக உள்ளது. இணையதளத்தில் இதனை விளையாடும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
ரஷ்யாவில் தொடங்கிய ப்ளூவேல் கேம், உலகம் முழுவதும் வேகமாக பரவியுள்ளது. 3000 பேர் வரை இந்த விளையாட்டினால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த விளையாட்டின் 50 நிலைகளைக் கடந்து செல்பவர்கள், தற்கொலை செய்து மரணித்து விடுகின்றனர்.
தமிழகத்தில் தற்கொலை
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து இதுபற்றி விழிப்புணர்வை காவல்துறையினரும், மாவட்ட நிர்வாகிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவர் மீட்பு
கரூர் அருகே நடையனூரில் அரசு உதவி பெறும் பள்ளியல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனின் நடத்தையில் ஆசிரியருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனையடுத்து மாணவனை கண்காதித்து வந்துள்ளார் அந்த ஆசிரியர் அப்போது மாணவன் கையை கிழித்து ப்ளூவேல் படம் வரைந்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசாரிடம் அந்த ஆசிரியர் புகார் அளித்து மாணவனை மீட்டனர்.
ஹைகோர்ட் மதுரை கிளை
ப்ளூவேல் கேமை பகிர்ந்தால் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரித்த நீதிமன்றம், பகிரப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டிஜிபி, உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் 7 ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
டிஜிபி எச்சரிக்கை
ப்ளூவேல் விளையாட்டு தொடர்பாக தவறான செய்திகளை ஆன்லைனில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சிறுவர்களின் நடவடிக்கையை பெற்றோரும், ஆசிரியர்களும் உன்னிப்பாக கவனிக்க வேண்டு என்று டிஜிபி டி.கே. ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.
ப்ளூவேல் தமிழக அரசு
இந்நிலையில் ப்ளூவேல் விளையாட்டை பகிர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நம்பத்தகுந்த ஆதாரங்களின்றி ப்ளூவேல் கேம் குறித்த குறுந்தகவல்களை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். ப்ளூவேல் தொடர்பான இணைப்புகளை பிறருக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
தண்டனைக்குரிய குற்றம்
இந்த விளையாட்டு மூலம் பிறரை தற்கொலைக்கு தூண்டுவது தண்டனைக்குரிய குற்றமாகும். சிறார்கள் ப்ளூவேல் கேம் விளையாடுவது தெரிந்தால் இணையம் போன்றவற்றை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல்
மாணவர்களை பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 12 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் ப்ளூவேல் விளையாட்டை அதிகம் விளையாடுகின்றனர். சிறார்களின் நடவடிக்கையில் மாற்றம் தெரிகிறதா என்று கண்காணிக்க பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.