கலெக்டர் கஜலட்சுமி, எஸ்.பி. முத்தரசி.. ஒட்டுமொத்த காஞ்சிபுரத்தையும் தூக்கி அடித்த எடப்பாடி அரசு!
சென்னை: தமிழக அரசு இன்று இரவு அறிவித்த அதிகாரிகள் இடமாறுதலில் காஞ்சிபுரம் மாவட்டத்தை மொத்தமாக பழிவாங்கியுள்ளதாகவே தெரிகிறது.
காஞ்சிபுரம் மாவக்க ஆட்சித் தலைவர், மாவட்ட எஸ்பி மற்றும் காஞ்சிபுரத்தை உள்ளடக்கிய வடக்கு மண்டல ஐஜி என மொத்தமாக தூக்கி அடித்துள்ளது எடப்பாடியார் அரசு.
ஏன் இப்படி காஞ்சிபுரத்தில் மொத்த நிர்வாகத்தையும் ஒரே நாளில் மாற்றம் செய்தனர் என்பது அனைவரையும் அதிர வைப்பதாக உள்ளது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளன.
காஞ்சிபுரம் கலெக்டர் கஜலட்சுமியை சென்னைக்கு மாற்றியுள்ளனர். புதிய கலெக்டராக பொன்னையா வந்துள்ளார்.
எஸ்.பி. முத்தரசியை இடமாற்றம் செய்து, புதிய பணியிடம் தராமல் உள்ளனர்.
அதேபோல வடக்கு மண்டல ஐஜி செந்தாமரைக் கண்ணனையும் இடமாற்றம் செய்துள்ளனர். அவருக்கும் பணியிடம் தரவில்லை.
இதில் முத்தரசி, செந்தாமரைக்கண்ணன் ஆகிய இருவரயைும் சிறையில் உள்ள குற்றவாளி சசிகலாவின் ஆசி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பழி வாங்கியுள்ளதாக கருதப்படுகிறது.
காரணம் கூவத்தூர் ரிசார்ட அனுபவம். அங்கு அதிரடியாக புகுந்து அமைச்சர்கள். அதிமுக எம்.எல்.ஏக்களிடம் இந்த இரு அதிகாரிகளும் விசாரணை நடத்தியது நினைவிருக்கலாம். அப்போது செந்தாமரைக்கண்ணனை அமைச்சர் ஒருவர் திட்ட, கோபமடைந்த முத்தரசி, அந்த அமைச்சரை எச்சரித்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்குத்தான் இப்போது இடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் போட்டு பழிவாங்கி விட்டது அதிமுக அரசு என்ற சர்ச்சை எழுந்துள்ளது. அதேசமயம், நேர்மையான கலெக்டரான கஜலட்சுமியை ஏன் மாற்றினர் என்பதுதான் புரியவில்லை.