முல்லைப் பெரியாறு: மத்திய தொழில் பாதுகாப்புப் படை கோரும் தமிழக அரசு!
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு மற்றும் அம் மாநிலக் கட்சிகள் தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
இம்முறை பிரச்சினை பெரிதாகும் முன் தீர்வு காணக் கோரியும், அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை கோரியும் மத்திய அரசை நாட முடிவு செய்துள்ளது தமிழக அரசு.
கேரளாவில் பினராய் விஜயன் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை மீண்டும் கிளற ஆரம்பித்துள்ளன அம்மாநில அரசியல் கட்சிகள்.
152 அடி
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, அணையின் நீர்மட்டம் 142 அடியாக இப்போது உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவை 152 அடியாக உயர்த்த தீர்ப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளதால், இதற்கான அனுமதியை பெறுவதில் தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பினராயி விஜயன் எதிர்ப்பு
ஆரம்பத்தில் தமிழகத்துக்கு சாதகமாக, அணை நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்த ஏதுவாகப் பேசி வந்த பினராயி விஜயன், இப்போது எதிர்ப்பாக பேச ஆரம்பித்துள்ளார்.
மீண்டும்
பருவமழை தீவிரமாக அணைக்கு இப்போது நீர்வரத்து அதிகமாகியுள்ள நிலையில், அணை பாதுகாப்பில் சந்தேகம், புதிய அணை கட்ட வேண்டும் போன்ற கோரிக்கைகளை கேரள கட்சிகள் மீண்டும் கிளப்பிவிட்டுள்ளன.
தமிழக அரசு முனைப்பு
இந்தப் பிரச்சினை பெரிதாவதற்கு முன்பு, அணையை முழுவதுமாக தமிழக அரசின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள தமிழக அரசு விரும்புகிறது. காரணம் அணை தமிழக அரசின் பராமரிப்பில் இருந்தாலும், பாதுகாப்பு கேரள அரசு வசம் உள்ளது. கேரள வனத்துறை, போலீஸ் கெடுபிடிகளைத் தாண்டி அணைக்குச் செல்வதில் தமிழக அதிகாரிகள், பணியாளர்களுக்கு பெரும் சிரமம் உள்ளது.
எனவே அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பைக் கோரி மத்திய அரசை நாடவிருக்கிறது தமிழக அரசு.