விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும்.. திருமாவளவன் ஆவேசம்
விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாக தமிழக அரசு விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விஜயேந்திரருக்கு எதிராக போராட்டங்களும், உருவப்படம் எரிப்பும் நடைபெற்று வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருத்தை தொடர்ந்து விஜயேந்திரருக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
காலை முதல் தமிழகத்தில் உள்ள காஞ்சி மடத்தை தமிழ் அமைப்பினர் முற்றுகையிட்டு வருவதால் அங்கெல்லாம் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விஜயேந்திரரின் செயலுக்கு அரசியல் கட்சியினரும், தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இவ்விவகாரத்தில் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்து விட்டதாக கூறிய அவர், தமிழக அரசு விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் தமிழ் மக்களிடம் இதுதொடர்பாக விஜயேந்திரர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.