தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை.. விஜயேந்திரர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்: கி. வீரமணி
விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை: ஆளுநர் முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் நடந்துக்கொண்ட விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதுவும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, எழுந்து நின்று மரியாதை செய்யாமல் விஜயேந்திரர் தமிழுக்கு அவமரியாதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் பேசிடும் உயிர்த் துடிப்புள்ள மொழியை அவமதித்துள்ள விஜயேந்திரர் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். கடவுள் மறுப்பாளரான தந்தை பெரியார், கடவுள் வாழ்த்துப் பாடப்படும்போதுகூட, அவரின் தள்ளாத வயதிலும், இருவரைப் பிடித்துக்கொண்டே எழுந்தே நிற்பார். ஆனால், காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தின் இளைய மடாதிபதி எழாமல் இருப்பதற்குப் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற குரல் உலகம் முழுவதிலிருந்தும் கிளம்பியுள்ளதாக கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
பெருந்தன்மையோடு, வருத்தமோ, மன்னிப்போ கேட்காமல், அதற்கு ஒரு பொருந்தா விளக்கத்தையும் அவரது மடத்தின் சார்பில் வெளியாகியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ள கி.வீரமணி, பகிரங்க மன்னிப்புக் கேட்கும்வரை தமிழ்ப் பெருமக்கள் மற்றும் தமிழாய்ந்த தமிழர்கள் இந்த விவகாரத்தை விடமாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.