முதல் நாளே அமோக ஆதரவு... கிலோ ரூ. 110 துவரம் பருப்பை வாங்க சென்னையில் அலைமோதிய கூட்டம்
சென்னை: அரசு விற்கும் மலிவு விலை துவரம் பருப்பை வாங்க சென்னை கூட்டுறவு அங்காடிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
போதிய அளவு பருவமழை பெய்யாதது, பருவம் தவறிய மழை போன்ற காரணங்களினால் நாட்டில் 2014-15ஆம் ஆண்டில் பருப்பு உற்பத்தி 20 லட்சம் டன் அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், கடந்த சில மாதங்களாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
எனவே, மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
அதன்படி, தமிழ்நாட்டில் துவரம் பருப்பு விலை ஏற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் மானிய விலையில் கூட்டுறவு அங்காடிகளில் இன்று முதல் கிலோ ரூ. 110க்கு துவரம் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய பெருநகரங்களில் உள்ள கூட்டுறவு பண்டக சாலை, தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் பல்பொருள் அங்காடிகளில் இந்தப் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் 20 பல்பொருள் அங்காடிகளில் துவரம் பருப்பு விற்கப்படுகிறது.
சந்தை விலையைவிட குறைவு என்பதாலும், பண்டிகைக் காலம் என்பதாலும் இந்த இறக்குமதி துவரம் பருப்பை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். காலையில் கடை திறக்கும் முன்னரே மக்கள் காத்திருக்கத் தொடங்கினர்.
பின்னர் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டதும் மக்கள் முண்டியடித்து அதனை வாங்கிச் சென்றனர். இதனால் கூட்டுறவு அங்காடிகள் மற்றும் அமுதம் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.