என்று தணியும் துயரம்? ஆந்திராவில் கொத்து கொத்தாக தமிழர்கள் படுகொலையாவதை தடுக்குமா தமிழக அரசு?
ஆந்திராவில் கொத்து கொத்தாக தமிழர்கள் படுகொலையாவதைத் தடுக்குமா தமிழக அரசு? என்பது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
Recommended Video
சென்னை: ஆந்திராவில் செம்மரக் கடத்தல்காரர்கள் என முத்திரை குத்தி கொத்து கொத்தாக தமிழர்கள் கொலை செய்யப்படுகின்றனர். இப்பேரவலத்துக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் கேள்வி.
செம்மரம் கடத்த வந்தார்கள்... இந்த ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து 35 தமிழர்களை ஆந்திரா காக்கை குருவிகளைப் போல படுகொலை செய்துள்ளது. ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் ஆந்திரா சிறைகளில் பல ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, வேலூர், சேலம் மாவட்ட மலைவாழ் மக்கள்தான் இத்தகைய துயர வாழ்வை நித்தம் நித்தம் சந்தித்து வருகின்றனர். இந்த மலைவாழ் இளைஞர்களை செம்மரக் கடத்தல் கும்பலின் பிடியில் இருந்து மீட்க தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை.
பிழைப்புக்காக ஆந்திரா
அந்த இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் பிழைப்பு தேடி ஆந்திராவுக்கு செல்லும் அவலம் ஏற்படுகிறது.
யாருக்கும் அக்கறை இல்லையே
அதேபோல் தமிழர்கள் பலி எடுக்கப்பட்ட பின்னர் குய்யோ முறையோ என பதறும் கட்சிகள், இயக்கங்கள் கூட இந்த விவகாரத்தில் அக்கறை செலுத்தாமல் இருக்கின்றன. மலைவாழ் இளைஞர்களிடம் இதுபற்றி எந்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதில்லை.
முயற்சிகள் அவசியம் தேவை
எத்தனையோ தமிழ் அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் இந்த மாவட்டங்களில் இயங்குகின்றன. இவற்றின் சார்பாக கூட இம்மக்களை ஆந்திரா செல்வதில் இருந்து தடுத்து நிறுத்தவும் இல்லை.
உறுதியான நடவடிக்கை தேவை
இதனால் ஆந்திரா போலீசார் ஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுப் படுகொலை செய்கிறது. மத்தியில் ஆளும் அரசுகளும் மனித உயிர்களை இப்படி காவு கொள்வதைத் தடுக்க எந்த குரலும் கொடுப்பதில்லை. ஆகையால் தமிழக இளைஞர்கள் ஆந்திரா மண்ணில் அநியாயமாக பலி கொடுக்கப்படுவதைத் தடுக்க போர்க்கால அடிப்படையிலான நடவடிக்கைகள் தேவை.